குறுந்தொகை - 305. மருதம் - தலைவி கூற்று
(இற்செறிக்கப்பட்டுக் காப்புமிகுதியால் வருந்திய தலைவி, “என்காமநோய் நீங்குதற்கு உரியன செய்யுந் துணையைப் பெற்றிலேன்”என்று தானே கூறுமுகத்தால் அறத்தொடு நிற்றல் வேண்டுமென்பதைத்தோழிக்குப் புலப்படுத்தியது.)
கண்தர வந்த காம ஒள்ளெரி என்புற நலியினும் அவரொடு பேணிச் சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே வந்தஞர் களைதலை அவராற் றலரே உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார் |
5 |
குப்பைக் கோழித் தனிப்போர் போல விளிவாங்கு விளியி னல்லது களைவோர் இலையா முற்ற நோயே. |
|
- குப்பைக்கோழியார். |
தலைவரைக்கண்ட கண்கள் தந்ததனால் உண்டாகிய காமமாகிய ஒள்ளியதீ என்பைப் பொருந்தும்படி வருத்தினும் அவர்பால் விரும்பிப்போய் அளவளாவுதற்கு நாம்! முன்பு நம்மை அவர் கண்ட இடத்திற் காணுதல்அரியேமாயினேம்; அவர்! நாமிருக்கும் இடத்திற்கு வந்து துன்பத்தைநீக்குதல் செய்தாரல்லர; இந்த நிலையில் யான் அடைந்த இக்காமநோய் பிறர் செலுத்தி விடார் இடையிலே சென்று பிரியச் செய்து நீக்காராக குப்பைக் கோழிகளின் தனிமையையுடைய சண்டையைப் போல தானே அழியும் வழி அழிந்தாலன்றி இதனை நீக்குவார் இல்லை.
முடிபு: காம ஒள்ளெரி நலியினும் சென்று முயங்கற்கு அருங்காட்சியம்; அவர் வந்து களைதலை ஆற்றலர்; யான் உற்ற நோய்போர்போல விளிவாங்கு விளியினல்லது, களைவோர் இல்லை.
கருத்து: என் துன்பத்தை நீக்கும் துணையாவாரைப் பெற்றிலேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 305. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, அவர், மருதம், குறுந்தொகை, கூற்று, வந்து, களைவோர், சென்று, இல்லை, விளிவாங்கு, யான், நலியினும், சங்க, எட்டுத்தொகை, தானே, ஒள்ளெரி, களைதலை, குப்பைக்