குறுந்தொகை - 303. நெய்தல் - தோழி கூற்று
(“தலைவி வேறுபாடு மிக்கனள்; ஆதலின் தாய் இற்செறிக்கக்கருதினாள்; இனி இவளை மணந்துகோடலே தக்கது” என்று தோழிதலைவனுக்கு உரைத்தது.)
கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப் பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும் |
5 |
இன்னிணர்ப் புன்னையம் புகர்நிழற் பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே. |
|
- அம்மூவனார். |
மீனுணவின் பொருட்டுக்கழியின் நீரை ஆராய்ந்து உணவுண்டு தங்கிய கரிய காலையுடைய வெள்ளியநாரைகள் அடைகரையிலுள்ள தாழையினிடத்து கூடி பெரிய கடலில் கரையை மோதி உடைகின்றஅலையின் ஓசையினால் துயில்கின்றதுறையையுடைய தலைவ என்னொடு! மின்னுகின்ற பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தினது அழகிய புள்ளியையுடைய நிழலில் பொன் போன்ற கோடுகளையுடைய நண்டுகளை அலைத்துவிளையாடிய போதே என் தோழியாகியதலைவி தம் பழையசெறிந்த நிலையினின்றும் நெகிழ்ந்த வளைகளையுடையளாகி இங்கே மிகப் பசந்தாள்.
முடிபு: துறைவ, என் தோழி அலவன் ஆட்டிய ஞான்றே நெகிழ்ந்தவளையல்; ஈங்குப் பசந்தனள் மன்.
கருத்து: இனித் தலைவியை மணத்தலே ஏற்புடையது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 303. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், கூற்று, குறுந்தொகை, நெய்தல், அலவன், ஆட்டிய, ஞான்றே, பசந்தனள், துறைவ, எட்டுத்தொகை, சங்க, நெகிழ்ந்த