குறுந்தொகை - 301. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றும்வன்மை யுடையாயோ?” என வினாவிய தோழிக்கு, “தலைவன்வாராவிடினும், அவன் வருவானென்னும் நினைவினால் நான்துயின்றிலேன்” என்று தலைவி கூறியது.)
முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக் கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக் கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல் வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல் மன்றம் போழும் இனமணி நெடுந்தேர் |
5 |
வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயில்துறந் தனவால் தோழியென் கண்ணே. |
|
- குன்றியனார். |
தோழி! முழவினைப்போன்ற அடி மரத்தையுடைய வளைந்த நிலையையுடைய பனையினது கொழுவிய ஓலையின் கண்ணே இயற்றிய சிறிய சுள்ளிகளாலாகிய கூட்டிலுள்ள கரிய காலையுடைய அன்றிலினது விருப்பத்தையுடைய முதல்சூலினால் உண்டான நோயையுடைய பெண் பறவை ஆண்பறவையை அழைக்கின்ற பாதியிரவில் தனது சக்கரத்தால்மன்றத்தைப் பிளந்து கொண்டு வரும் தொகுதியாகிய மணியையுடைய தலைவனது நெடியதேர் வாராதாயினும்! வருவது போல! காதினிடத்து ஒலிக்கும் ஒலியினால் என்னுடைய கண்கள் தூக்கத்தை நீத்தன.
முடிபு: தோழி, கங்குலில் தேர் வாராதாயினும் வருவது போலஇசைக்கும் அரவமொடு என் கண் துயில் துறந்தன.
கருத்து: தலைவன் வரவை எதிர்பார்த்துத் துயின்றிலேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 301. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, வருவது, குறுந்தொகை, கூற்று, தோழி, வாராதாயினும், கண்ணே, சங்க, எட்டுத்தொகை, தலைவன்