குறுந்தொகை - 29. குறிஞ்சி - தலைன் கூற்று
(தலைவன் இரவுக் குறியை விரும்ப, அதனைத் தோழி மறுத்து, வரைந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பித்தாள்; பின்னும் அவனது நெஞ்சம் இரவுக் குறியை விரும்ப, “நின் குறையை அறிந்து நிறைவேற்றுவார் அரியராகவும், நீ வருந்துதலினாற் பயன் யாது?” என்று அவன் அதனை நோக்கி இரங்கிக் கூறியது).
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப் பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும் பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு |
5 |
மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. |
|
- அவ்வையார். |
நெஞ்சே! நல்ல உரைகள் நீங்கி பயனற்ற உரைகள் பரவப் பெற்று பெய்தலை உடைய மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப் படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல உள்ளத்தினால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தா நின்று பெறுதற் கரியதை பெற விரும்பினை; உயர்ந்த மரக் கொம்பில் உள்ள குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல மனம் பொருந்த நின் கருத்தைத் தழுவிக் கொண்டு நின் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரை பெறுவாயாயின் உனது போராட்டம் மிகவும் பெருமை உடையது.
முடிபு: நெஞ்சே, நின் பூசல் கேட்குநர்ப் பெறின் பெரிது.
கருத்து: இனித் தலைவியை இரவில் காண்டல் அரிது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 29. குறிஞ்சி - தலைன் கூற்று, இலக்கியங்கள், நெஞ்சே, நின், குறுந்தொகை, தலைன், கூற்று, குறிஞ்சி, உரைகள், உடைய, கேட்குநர்ப், பெற்று, குறியை, எட்டுத்தொகை, சங்க, இரவுக், விரும்ப, பூசல்