குறுந்தொகை - 289. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிய பருவம் வந்தது கண்டு தலைவி வேறுபட்டாள்எனக் கவலையுற்ற தோழிக்கு, “நான் அவரை நினைந்து இரங்கினேன்அல்லேன்; என் பொருட்டுக் கவலை உடையார் போல் இவ்வூரினர்அவரைக் கொடியர் என்பதை அறிந்தே வருந்தினேன்” என்று தலைவி கூறியது.)
வளர்பிறை போல வழிவழிப் பெருகி இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குழைபிசைந் தனையே மாகிச் சாஅய் உழையர் அன்மையின் உழப்ப தன்றியும் மழையுந் தோழி மான்றுபட் டன்றே |
5 |
பட்ட மாரி படாஅக் கண்ணும் அவர்திறத் திரங்கு நம்மினும் நந்திறத் திரங்குமிவ் வழங்கல் ஊரே. |
|
- பெருங் கண்ணனார். |
தோழி! பூருவ பக்கத்துவளர்கின்ற பிறையைப் போல மேலும்மேலும் பெருக்கத்தை அடைந்து தோட்சந்தில் அணிந்த வளையை நெகிழச் செய்த துன்பத்தைத் தரும் காம நோயினால் தளிரைக் கசக்கினாற் போன்ற நிலையை உடையேமாகி மெலிந்து அந் நோயைத் தீர்ப்பதற்குரிய தலைவர்பக்கத்தில் உள்ளார் அல்லாமையினால் நாம் துன்பப்படுவது அல்லாமலும் இம் மழையும் மயங்கிப் பெய்தது அங்ஙனம் பெய்த மழை பெய்வதற்கு முன்னரே இந்தக் கலக்கத்தை உடைய ஊரில் உள்ளார் அவர் பொருட்டு வருந்துகின்ற நம்மைக் காட்டிலும் மிக நம்மாட்டு இரங்குவர்.
முடிபு: தோழி, அனையேமாகிச் சாஅய் உழப்பதன்றியும் மழையும்மான்றுபட்டன்று; படாஅக் கண்ணும் ஊர் இரங்கும்.
கருத்து: பிறர் தலைவரைக் கொடியர் என்பது நினைந்து வேறுபட்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 289. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், தோழி, கூற்று, குறுந்தொகை, முல்லை, படாஅக், கண்ணும், உள்ளார், நினைந்து, எட்டுத்தொகை, சங்க, கொடியர், சாஅய்