குறுந்தொகை - 288. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் அன்பிலன் என்று தோழி கூறிக் கொண்டிருப்ப, அவனது வரவு உணர்ந்த தலைவி அவன் செய்வன யாவும் இனியன என்று கூறியது.)
கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்து குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன் இனிய னாகலி னினத்தி னியன்ற இன்னா மையினு மினிதோ இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. |
5 |
- கபிலர். |
தோழி! மிளகு கொடி வளர்கின்ற மலைப் பக்கமாகிய அவ்விடத்தே தளிரை உண்ணுகின்ற குரங்குகள் ஒன்றாகத் திரண்டு இருக்கின்ற பெரிய மலைகளை உடைய நாட்டினனாகிய தலைவன் பிரிந்தனனாயினும் நம் மாட்டு இனிமையை உடையான்; ஆகலின்! உறவுடையாரால் செய்யப்படும் இன்னாமையைக் காட்டி லும் இனியதென்றுசிறப்பிக்கப்படும் தேவர் உலகம் இனிமையை உடையதோ?
முடிபு: நாடன் இனியனாகலின், இனத்தின் இயன்ற இன்னாமையினும் புத்தேணாடு இனிதோ?
கருத்து: அன்புடைய தலைவன் செய்வன யாவும் இனியனவே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 288. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, தலைவன், யாவும், இனிமையை, செய்வன, சங்க, எட்டுத்தொகை, தோழி