குறுந்தொகை - 287. முல்லை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்து, "தலைவர் நம்மைத் துறந்தார்; இனி வாரார்" என்று கவன்ற தலைவியை நோக்கி, "இதோ கார்ப் பருவம்வந்தது; இனி அவர் துறந்திரார்; வருவர்" என்று தோழி கூறியது.)
அம்ம வாழி தோழி காதலர் இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு |
5 |
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச் செழும்பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வான மேர்தரும் பொழுதே. |
|
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
தோழி! கேட்பாயாக; பன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத் தாங்கித் தளர்ந்து நடக்க மாட்டாத பச்சைப் புளிச் சுவையில் விருப்பத்தை உடைய முதற் சூலை உடைய மகளிரைப் போல நீரை முகந்து கொண்டு வானத்தின் கண் ஏறாமல் அந்நீர்ப் பொறையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளம் மிக்க பல மலைகளை நோக்கி பெரிய முழக்கத்தை உடைய மேகங்கள் எழுகின்ற கார்ப் பருவத்தை இப்பொழுது பார்த்த பின்பும் தலைவர் நம்மைப் பிரிந்து வாராமல் இருப்பாரோ? வருவர்.
முடிபு: தோழி, காதலர் பொழுது கண்டும் துறக்குவர் கொல்லோ?
கருத்து: கார்ப் பருவம் வந்தமையின் இனித் தலைவர் விரைவில் மீள்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 287. முல்லை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், முல்லை, கார்ப், உடைய, கொண்டு, தலைவர், குறுந்தொகை, கூற்று, கொல்லோ, துறக்குவர், காதலர், நோக்கி, எட்டுத்தொகை, வருவர், சங்க