குறுந்தொகை - 279. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை ஆற்றல் வேண்டும் என்று தோழி வற்புறுத்திய பொழுது தலைவி ஆற்றாமையின் காரணத்தைக் கூறியது.)
திரிமருப் பெருமை யிருணிற மையான் வரிமிடறு யாத்த பகுவாய்த் தெண்மணி புலம்புகொள் யாமத் தியங்குதொ றிசைக்கும் இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல் |
5 |
துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் இரும்பல் குன்றம் போகித் திருந்திறைப் பணைத்தோள் உள்ளா தோரே. |
|
- மதுரை மருதனிளநாகனார். |
தோழி! மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய பொற்றைக் கல் புழுதி படிந்த யானையைப் போல விளங்கத் தோன்றுகின்ற பெரிய பல மலைகளைக் கடந்து சென்று இலக்கணத்தால் திருந்திய சந்துகளை உடைய மூங்கிலைப் போன்ற என் தோள்களை நினையாதோர் முறுக்கிய கொம்பையும் இருள் நிறத்தையும் உடைய எருமையினது வளர்கின்ற கழுத்தின்கண் கட்டப்பட்ட பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது தனிமையைக் கொண்ட நடு இரவில் அவ்வெருமை நடக்கும் தோறும் ஒலிக்கின்ற இக் காலம் தாம் வருதற்குரிய செவ்வியாக இருப்பவும் அவர் வாராராயினர்.
முடிபு: போகி உள்ளாதோர், வாரார்.
கருத்து: தலைவர் வருதற்குரிய செவ்வி இஃதாக இருந்தும் அவர் வந்திலரென ஆற்றேனாயினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 279. முல்லை - தலைவி கூற்று, உடைய, இலக்கியங்கள், தலைவி, கூற்று, குறுந்தொகை, முல்லை, வருதற்குரிய, அவர், பெரிய, தோழி, எட்டுத்தொகை, சங்க, வாரார், மறந்த