குறுந்தொகை - 273. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிவான் என எண்ணிக் கவன்ற தலைவியை நோக்கி,"தலைவன் பிரிய எண்ணினும் நம் நிலை நோக்கிச் செலவு தவிர்வான்" என்று தோழி கூறித் துணிவை உண்டாக்கியது.)
அல்குறு பொழுதில் தாதுமுகை தயங்கப் பெருங்காட் டுளரும் அசைவளி போலத் தண்ணிய கமழும் ஒண்ணுத லோயே நொந்தனை யாயிற் கண்டது மொழிவல் பெருந்தேன் கண்படு வரையின் முதுமால் |
5 |
பறியா தேறிய மடவோன் போல ஏமாந் தன்றிவ் வுலகம் நாமுளே மாகப் பிரியலன் தெளிமே. |
|
- சிறைக்குடி யாந்தையார். |
இரவில் தாதை உடைய அரும்பு விளங்க பெரிய காட்டில் தடவி வருகின்ற அசைகின்ற காற்றைப் போல குளிர்ந்தனவாகிய நறுமணம் வீசுகின்ற ஒள்ளிய நெற்றியை உடையோய் நீ தலைவன் பிரிவான் என்று வருந்தினையாயின் யான் அறிந்ததைச் சொல்லுவேன் கேட்பாயாக; பெரிய தேனிறால் தங்கி இருக்கும் மலைப் பக்கத்தில் அத்தேனிறாலைப் பெறும் பொருட்டு பழைய கண்ணேணியின்மேல் அறியாமல் ஏறிய அறிவிலாதானைப் போல இந்த உலகமானது ஏமாந்தது; நாம் உயிரோடு இருப்ப அது காறும் தலைவன் நின்னைப் பிரிந்து செல்லான்; இதனைத் தெளிவாயாக.
முடிபு: நுதலோய், நொந்தனையாயின் மொழிவல்; இவ்வுலகம் ஏமாந்தன்று, உளேமாகப் பிரியலன்; தெளிமே.
கருத்து: தலைவன் நின்னைப் பிரிந்து செல்லான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 273. பாலை - தோழி கூற்று, தலைவன், தோழி, இலக்கியங்கள், பாலை, குறுந்தொகை, கூற்று, பெரிய, நின்னைப், பிரிந்து, செல்லான், தெளிமே, பிரிவான், எட்டுத்தொகை, சங்க, மொழிவல், பிரியலன்