குறுந்தொகை - 261. குறிஞ்சி - தலைவி கூற்று
(இரவுக் குறிக்கண் வந்த தலைமகன் சிறைப்புறத்தே இருப்ப அதனை அறிந்த தலைவி தோழிக்குச் சொல்வாளாகி, "தலைவரது வரவை எதிர்நோக்கி வருந்தி இரவெல்லாம் துயின்றிலேன்" என்று கூறி, விரைவில் வரைந்து கோடலே நன்றென்பதைப் புலப்படுத்தியது.)
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள் சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் நள்ளென் யாமத் தையெனக் கரையும் அஞ்சுவரு பொழுதி னானு மென்கண் |
5 |
துஞ்சா வாழி தோழி காவலர் கணக்காய் வகையின் வருந்தியென் நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே. |
|
- கழார்க் கீரனெயிற்றியார். |
தோழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக பழைய மழை பொழிந்ததாக செவ்வி அழிந்து ஒழுகிய உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில் சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்ணை உடைய எருமை இருள் செறிந்த நடு இரவின் கண் ஐயென்று ஒலிக்கும் அச்சம் உண்டாகின்ற காலத்திலும் என்னுடைய கண்கள் தூங்காவாயின.
முடிபு: தோழி, வருந்தி உற்ற விழுமத்தான் பொழுதினானும் என்கண் துஞ்சா.
கருத்து: தலைவனது வருகையை நோக்கி நான் இரவில் துயிலாதுஇருந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 261. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், உடைய, தலைவி, வருந்தி, கூற்று, குறிஞ்சி, தோழி, குறுந்தொகை, இரவில், சங்க, எட்டுத்தொகை, துஞ்சா