குறுந்தொகை - 26. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் பிறிதோர் தெய்வமென்று கட்டுவிச்சியால் அறிந்த தாயர் முதலியோருக்குத் தோழி, “இவள் ஒரு தலைவனொடு நட்புப் பூண்டாள்; அவனை ஓர் ஆண் குரங்கும் அறியும்” என்று உண்மையைக் கூறியது.)
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாடன் தகாஅன் போலத் தான்றீது மொழியினும் தன்கண் கண்டது பொய்க்குவ தன்றே |
5 |
தேக்கொக் கருந்து முள்ளெயிற்றுத் துவர்வாய் வரையாடு வன்பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும்அக் கொடியோ னையே. |
|
- கொல்லனழிசி. |
அரும்புத் தன்மை இல்லாமல் மலர்ந்த கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது அதன் மலரைக் கொய்யும் மகளிரைப் போல தோன்றுதற்கு இடமாகிய நாட்டை உடைய தலைவன் இவளுக்கு உரியனாகும் தகுதி இல்லான் என்பது போல கட்டுவிச்சி தெய்வத்தால் வந்ததென்று தீங்கானதைக் கூறினும் தேமாவின் கனியை உண்ணுகின்ற முள்ளைப் போன்ற கூரிய பற்களையும் செவ்விய வாயையும் உடைய மலைகளில் விளையாடும் வலிய குட்டியின் தந்தையாகிய ஆண் குரங்கும் அந்தக் கொடியவனாகிய தலைவனை ஆதலின் அது தன் கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை காணேன் என்று பொய் சொல்லாதது.
முடிபு: நாடன் தாகன்போலத் தான் தீதுமொழியினும் அக் கொடி யோனைக் கடுவனும் அறியும்; ஆதலின் கண்டது பொய்க்குவ தன்று.
கருத்து: இத் தலைவியின் நோய்க்குக் காரணம் ஒரு தலைவனோடு செய்த நட்பே ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 26. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, உடைய, குறுந்தொகை, கூற்று, கண்டது, நாடன், கடுவனும், இருந்த, ஆதலின், பொய்க்குவ, குரங்கும், சங்க, எட்டுத்தொகை, தலைவியின், காரணம், மலர்ந்த, வேங்கை