குறுந்தொகை - 259. குறிஞ்சி - தோழி கூற்று
(தோழி அறத்தொடு நின்றபின், அங்ஙனம் தான் செய்ததைத் தலைவன் அறிந்தால் வரைந்து கொள்ளுவதற்குரிய முயற்சிகளைச் செய்வானென்று தான் எண்ணியதைத் தலைவிக்கு உணர்த்துவாளாய், "பொய் சொல்லுவதில் பயன் யாது? தலைவன் நன்னெஞ்சமுடையான்" என்று கூறியது.)
மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத் தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள் முகையவிழந் தானா நாறு நறுநுதல் பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும் |
5 |
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற் பொய்ம்மொழி கூறல தெவனோ நெஞ்ச நன்றே நின்வயி னானே. |
|
- பரணர். |
மேகங்கள் சேர்ந்து எழுந்த மழையை உடைய மலையின் இடத்துள்ள அருவிக்கு அருகில் பொருந்திய தண்ணிய நறிய காந்தளரும்புகள் விரிந்து அமையாதனவாய் மணம் வீசுகின்ற நறிய நெற்றியையும் பல இதழை உடைய தாமரைப் பூவைப் போன்ற குளிர்ச்சியை உடைய கண்ணையும் உடைய மாமை நிறம் பொருந்தியோய் நீ என் பிழையைப் பொறுப்பாயாயினும் அன்றிச் சினந்து கொல்வாயாயினும் நினது உயர்வை நீயே அளவிட்டு அறியும் ஆற்றலை உடையை; மெய்யைப் போலப் பொய் வார்த்தைகளை கூறுதலாகிய அஃது என்ன பயனைத் தரும்? நின் திறத்து தலைவனது நெஞ்சு நலமுடையது.
முடிபு: மாஅயோயே, நின் புரைமை நீ அறிவை; பொய்ம்மொழி கூறல் எவன்? நன் வயினான் நெஞ்சம் நன்று.
கருத்து: நான் அறத்தொடு நின்றதனால் நன்மையே விளையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 259. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, உடைய, குறுந்தொகை, கூற்று, குறிஞ்சி, பொய்ம்மொழி, நின், புரைமை, நறிய, அறத்தொடு, எட்டுத்தொகை, சங்க, தான், தலைவன், பொய்