குறுந்தொகை - 254. பாலை - தலைவி கூற்று
(தலைவன் வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, வருந்திய தலைவியை நோக்கி, "நீ ஆற்றல் வேண்டும்" என்று வற்புறுத்திய தோழிக்கு, "அவர் கூறிய பருவம் வந்த பின்னரும் அவர் வருவார் எனச் சொல்லும் தூதுகள் வந்தில; அவர் என்னை மறந்தனர்" என்று தலைவி கூறியது.)
இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலையலர் வந்தன வாரா தோழி துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர் பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார் |
5 |
செய்பொருள் தரனசைஇச் சென்றோர் எய்தின ராலென வரூஉந் தூதே. |
|
- பார்காப்பானார். |
தோழி! இலை இல்லாத அழகிய கிளையினிடத்துத் திரளாகிய வண்டுகள் ஆரவாரிக்கும்படி நகிலை ஒத்த மெல்லிய அரும்புகள் விரிந்த கோங்க மரத்தினது முதற்பூக்கும் மலர்கள் தோன்றின; ஈட்டுதற்குரிய பொருளைக் கொண்டு வருதலை விரும்பிச் சென்ற தலைவர் மீண்டு வந்தனரென்று அறிவித்தற்கு வரும் தூதுகள் வந்தில; நம்மைப் பிரிந்து சென்ற அவர் துயிலுதலினிய இராக் காலத்தில் உடன் துயிலுதலை மறந்தனர்; தாம் பழகுகின்ற நறிய என் கூந்தலாகிய அணையையும் நினையாராயினர்.
முடிபு: தோழி, அலர் வந்தன; தூது வாரா; அவர் மறந்தனர்; உள்ளார்.
கருத்து: தலைவர் என்னை மறந்தனர் போலும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 254. பாலை - தலைவி கூற்று, மறந்தனர், அவர், இலக்கியங்கள், தலைவி, பாலை, சென்ற, தோழி, குறுந்தொகை, கூற்று, வந்தன, வாரா, தலைவர், பருவம், எட்டுத்தொகை, சங்க, தூதுகள், வந்தில, என்னை