குறுந்தொகை - 253. பாலை - தோழி கூற்று
(பிரிவிடை வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின் நிலையைஉணர்ந்திலர்; உணரின் தம்வினை முற்றுதலையும் ஓராது உடனே மீள்வர்" என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)
கேளா ராகுவர் தோழி கேட்பின் விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற் பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின் நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரற் |
5 |
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை ஆறுசென் மாக்கள் சேக்கும் கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. |
|
- பூங்கண்ணனார். |
தோழி! ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில் புலி தனக்குரிய உணவைச் செலுத்தி வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகை யினிடத்து வழிச் செல்லும் மனிதர் தங்கும் சிகரங்கள்உயர்ந்த விளக்கத்தை உடைய மலைகளை கடந்து சென்ற தலைவர் நின் துயரைக் கேளார் ஆவர்; கேட்டாராயின் சிறந்த பொருள் நீங்குவதாக இருப்பினும் நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து வருந்தி பெரிய அழகு நீங்கிய நினது இக் காலத்துள்ள துயரமானது கெடும் படி பின்பும் தாமதியாமல் வருவார்.
முடிபு: தோழி, மலையிறந்தோர் கேளாராகுவர்; கேட்பின் நீடலர்.
கருத்து: அவர் நின் நிலையை அறிந்திலர்; அறியின் உடனே மீள்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 253. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், பாலை, நின், குறுந்தொகை, கூற்று, மீள்வர், கேட்பின், உடனே, சங்க, எட்டுத்தொகை, தலைவர்