குறுந்தொகை - 248. நெய்தல் - தோழி கூற்று
(வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, "வெறியாட்டு அயர்ந்து தாய் தலைவனை அறிந்து, வரைவுக்கு உரியவற்றைச் செய்கின்றாளாதலின் வரைவுண்டாதல் ஒருதலை; அதற்குரிய நாளும் அணிமையில் உள்ளது; ஆதலின் நீ ஆற்றா யாதல் நன்றன்று" என்று தோழி கூறியது.)
அதுவர லன்மையோ அரிதே அவன்மார் புறுக வென்ற நாளே குறுகி ஈங்கா கின்றே தோழி கானல் ஆடரை புதையக் கோடை யிட்ட அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக் |
5 |
குறிய வாகுந் துறைவனைப் பெரிய கூறி யாயறிந் தனளே. |
|
- உலோச்சனார். |
தோழி! கடற்கரைச் சோலையின் இடத்திலுள்ள அசைந்த அடியிடம் புதையும்படி மேல்காற்றுக் கொணர்ந்து இட்ட அடும்பங் கொடி படர்ந்த மணற் குவியல் பரவ நெடிய பனை மரங்கள் குறியனவாகும் கடற்றுறையை உடைய தலைவனை முருகன் என்று சொல்லி வெறியெடுத்து நம் தாய் அறிந்து கொண்டாள்; ஆதலின் வரைவுக்குரிய நாள் வாராமை அரிதாகும்; வரைவு நேரும்; அவனது மார்பை அடைக என்று வரையறுத்த நாள் அணிமையாக வந்தும் இவ்வண்ணம் நின்பால் ஆற்றாமை உண்டாகின்றது; இஃது என் கொல்?
முடிபு: தோழி, துறைவனை யாய் கூறி அறிந்தனள்; அது வரலன்மைஅரிது; குறுகி ஈங்காகின்று.
கருத்து: வரைவு அணிமையில் நிகழ்வதாதலின் நீ ஆற்றாது இருத்தல் நன்றன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 248. நெய்தல் - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், வரைவு, குறுந்தொகை, கூற்று, நெய்தல், குறுகி, நன்றன்று, கூறி, நாள், ஆதலின், தாய், எட்டுத்தொகை, சங்க, தலைவனை, அறிந்து, அணிமையில்