குறுந்தொகை - 249. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரியும் காலத்தில், தன்னை நோக்கி, "நீ ஆற்றும் ஆற்றல் உடையையோ?" என்ற தோழிக்கு, "அவர் மலையைக் கண்டு ஆற்றுவேன்" என்பது படத் தலைவி கூறியது.)
இனமயில் அகவு மரம்பயில் கானத்து நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப் படுமழை பொழிந்த சாரலவர் நாட்டுக் குன்ற நோக்கினென் தோழி பண்டை யற்றோ கண்டிசின் நுதலே. |
5 |
- கபிலர். |
தோழி! திரளாக உள்ள மயில்கள் ஆரவாரிக்கும் மரங்கள் செறிந்த காட்டிடத்தில் வெள்ளை முகத்தை உடைய கருங்குரங்கு குட்டிகளோடு குளிரால் நடுங்கும்படி ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச் சாரலை உடைய அத் தலைவரது நாட்டில் உள்ள குன்றத்தை பார்த்தேன்; அதனால் ஒளி இழந்து பசப்பூர்ந்த என் நெற்றி பசப்பூராத பழைய தன்மை உடைய தாயிற்றோ? பார்ப்பாயாக.
முடிபு: தோழி, அவர் நாட்டுக் குன்றம் தோக்கினென்; நுதல் பண்டையற்றோ? கண்டிசின்.
கருத்து: தலைவருடைய குன்றத்தை நோக்கி ஆற்றி இருப்பேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 249. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, உடைய, குறிஞ்சி, குறுந்தொகை, தோழி, கூற்று, கண்டிசின், குன்றத்தை, உள்ள, நோக்கி, எட்டுத்தொகை, சங்க, அவர், பொழிந்த, நாட்டுக்