குறுந்தொகை - 246. நெய்தல் - தலைவி கூற்று
(இரவுக் குறி வந்த தலைவன் சிறைப்புறத்தில் இருப்ப, தலைவி தோழியை நோக்கிக் கூறுவாளாய், "நேற்று இரவில் ஒரு தேர் ஈண்டுப் போந்து சென்றது என்று சிலர் சொல்ல, அது முதல் தாய் என்னை வருத்துகின்றாள்" எனக் காவன் மிகுதியை உணர்த்தி வரைவு கடாவச் செய்தது.)
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப் பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர் தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண் டோரு மலைக்கு மன்னை பிறரும் |
5 |
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் இளையரு மடவரும் உளரே அலையாத் தாயரொடு நற்பா லோரே. |
|
- கபிலர். |
தோழி! பெரிய கடற்கரையின்கண் உள்ளதாகிய சிறிய வெண்மையை உடைய காக்கை களிற்றினது காதைப் போன்ற பசிய இலையைக் கலக்கி குளிர்ச்சியை உடைய கழி நீரை இரையின் பொருட்டுத் துழாவுகின்ற பாதி இரவில் தனியாக ஒருதேர் இங்கே வந்து மீண்டு சென்றதென்று அயலார் கூறுவர்; அது தொடங்கி தாய் என்னைத் துன்புறுத்துகின்றாள்; பின்னல் நாலவிடப்பட்ட கூந்தலை உடைய மின்னுகின்ற ஆபரணத்தை அணிந்த மகளிருள் இளமை உடையோரும்; முடையோருமாகிய பிறரும! இருக்கின்றனர் அவர் தம்மை வருத்துதல் இல்லாத தாய்மாரோடு நல் வினையுடையர்.
முடிபு: தேர் வந்து பெயர்ந்ததென்ப; அன்னை அலைக்கும்; மகளிர் இளையரும் மடவரும் பிறரும் உளர்; அவர் நற்பாலோர்.
கருத்து: இப்பொழுது காப்பு மிக்கதாதலின், தலைவன் என்னை வரைந்து கொள்வதே நலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 246. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, உடைய, குறுந்தொகை, கூற்று, நெய்தல், மகளிர், பிறரும், வந்து, அவர், காக்கை, மடவரும், தேர், சங்க, எட்டுத்தொகை, தலைவன், இரவில், தாய், என்னை