குறுந்தொகை - 245. நெய்தல் - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, "தலைவனது கொடுமையைப் பிறர் அறியின் அது மிக இன்னாது; ஆதலின் யான் ஆற்றியிருப்பேன்"என்று தலைவி கூறியது.)
கடலங் கான லாய மாய்ந்தவென் நலமிழந் ததனினு நனியின் னாதே வாள்போல் வாய கொழுமடல் தாழை மாலைவேல் நாட்டு வேலி யாகும் மெல்லம் புலம்பன் கொடுமை |
5 |
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே. | |
- மாலைமாறனார். |
தோழி! வாளரம் போன்றவிளிம்பை உடைய கொழுவிய மடலை உடைய தாழையானது வரிசையாக உள்ள வேல்களை நாட்டிய வேலியைப் போலப் பயன் தரும் மெல்லிய கடற்கரையை உடைய தலைவன் என் மாட்டுச் செய்த கொடுமை பலர் அறியும் வண்ணம் பரவி வெளிப்பட்டால் அங்ஙனம் வெளிப்படுதல் அழகிய கடற்கரைச் சோலையிலே விளையாடும் மகளிர் கூட்டத்தினர் பாராட்டிய எனது பெண்மை நலத்தை நான் இழந்ததைக் காட்டிலும் மிக இன்னாமையைத் தருவதாகும்.
முடிபு: புலம்பன் கொடுமை வெளிப்படின் நலம் இழந்ததனினும் இன்னாது.
கருத்து: என் துயரப் பிறர் அறியாதவாறு ஆற்றுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 245. நெய்தல் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, நெய்தல், கொடுமை, குறுந்தொகை, உடைய, புலம்பன், இன்னாது, தலைவன், எட்டுத்தொகை, சங்க, பிறர்