குறுந்தொகை - 244. குறிஞ்சி - தோழி கூற்று
(தலைவன் இரவுக் குறி வந்து ஒழுகா நின்ற காலத்துக் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி வரைவு கடாயது.)
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல் கேளே மல்லேங் கேட்டனெம் பெரும ஓரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கியாம் |
5 |
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே. | |
- கண்ணனார். |
தலைவ ஊரில் உள்ளார் பலரும் துயிலும் இருள் செறிந்த இடையிரவின் கண் வலியைஉடைய களிற்றைப் போல வந்து இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை யாம் கேளேம் அல்லேம்; கேட்டேம்; தலைக்கொண்டை சிதைய தோகை மெலிய நல்ல மயில் வலையின் கண்ணே அகப் பட்டாற் போல யாம் வருந்துந் தோறும் மறமிக்கதாய் எம்மைத் தழுவுவாள்; அதனால் நின் குறிப்பறிந்து நின்பால் வர இயலவில்லை.
முடிபு: பெரும, கதவம் முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனம்;யாய் முயங்கும்.
கருத்து: காவல் மிகுதியால் நின்னைத் தலைவி காண்டல் அரிதாதலின் வரைந்து கோடலே நலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 244. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, யாம், முயங்கும், அல்லேம், பெரும, கேளேம், வந்து, எட்டுத்தொகை, சங்க, மிகுதியால், முயறல்