குறுந்தொகை - 241. குறிஞ்சி - தலைவி கூற்று
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "யான்ஆற்றுவதற்கு எண்ணியும் என் கண்கள் தாமே அழுதன; என் அவசநிலைக்கு யாது செய்வேன்!" என்று தலைவி கூறியது.)
யாமெங் காமந் தாங்கவும் தாந்தம் கெழுதகை மையி னழுதன தோழி கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பத நோக்கி ஏறா திட்ட ஏமப் பூசல் |
5 |
விண்டோய் விடரகத் தியம்பும் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. |
|
- கபிலர். |
தோழி! நாம் காம நோயைப் பொறுத்து ஆற்றி இருப்பவும் கன்றுகளை வழியிலே செலுத்திய புல்லியதலையை உடைய சிறுவர்கள் மன்றத்தின்கண் உள்ள வேங்கை மரம் மலரும் செவ்வியைப் பார்த்து அம் மரத்தின் மேல் ஏறாமல் செய்த இன்பத்தைத் தரும் ஆரவாரம் வானத்தை அளாவிய மலை முழையின்கண் எதிரொலி உண்டாக்கும் குன்றங்களை உடைய நாட்டிற்குத் தலைவனை கண்ட எம் கண்களாகிய தாம் தமக்கு எம்பாலுள்ள உரிமையினால் தலைவர் பிரிந்தமைகருதி அழுதன.
முடிபு: தோழி, யாமே காமம் தாங்கவும் கண்தாம் கெழுதகைமையின்அழுதன.
கருத்து: யான் ஆற்ற எண்ணியும் ஆற்றாமை மீதூர்கின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 241. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, தோழி, குறுந்தொகை, குறிஞ்சி, வேங்கை, உடைய, தாங்கவும், நோக்கி, எட்டுத்தொகை, சங்க, எண்ணியும், அழுதன