குறுந்தொகை - 242. முல்லை - செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று மீண்டு வந்த செவிலித் தாய், "தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றிவாழ்கின்றனர். அவன் எங்கே சென்றாலும் விரைவில் வந்து விடுகின்றான்"என்று நற்றாய்க்குக் கூறியது.)
கானங் கோழி கவர்குரற் சேவல் ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினும் |
5 |
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே. | |
- குழற்றத்தனார். |
தலைவி காட்டுக் கோழியினது கவர்த்த குரலை உடைய சேவலினது ஒள்ளிய புள்ளிகளை உடைய கழுத்தில் தண்ணிய நீர்த்துளி துளிக்கும்படி புதலின்கண் நீர் ஒழுகும் மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தின் கண் அமைந்த சிறிய ஊரில் உள்ளாள்; தலைவனது தேர் வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொண்டு வேற்றூருக்குச் சென்றாலும் சென்ற ஊரின் கண்ணே தங்கிப் பின் வருதலை அறியாது; உடனே வந்து விடும்.
முடிபு: மடந்தை சீறூரோள்; செம்மல் தேர் செலினும் அறியாது.
கருத்து: தலைவனும் தலைவியும் பிரிவின்றி ஒன்றி வாழ்கின்றனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 242. முல்லை - செவிலித்தாய் கூற்று, முல்லை, இலக்கியங்கள், தலைவனும், அறியாது, தலைவியும், செவிலித்தாய், குறுந்தொகை, கூற்று, தேர், செம்மல், உடைய, செலினும், வந்து, எட்டுத்தொகை, பிரிவின்றி, சென்றாலும், சங்க, மடந்தை