குறுந்தொகை - 205. நெய்தல் - தலைவி கூற்று
(வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாளெனவருந்திய தோழியை நோக்கி, “தலைவர் பிரிந்தவுடன் என் நுதலிற்பசலை தானே பரந்தது” என்று தலைவி கூறியது.)
மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக் கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் |
5 |
யாங்கறிந் தன்றுகொல் தோழியென் தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே. |
|
- உலோச்சனார். |
தோழி! அலைகள்கொண்டு வந்திட்ட மணலையுடைய கடற்கரையையுடைய தலைவன் மின்னலைச் செய்கின்றதொகுதியையுடையனவாகிய பெய்தலையுடைய மேகம் பெய்யாநிற்ப வானத்தில் அசையும் அன்னப் பறவை பறத்தலில் உயர்ந்ததைப்போல பொற்படைகளாற் பொலிவு பெற்ற யானைமருப்பாற் செய்த வெள்ளிய தேரின்கண் ஏறி கலங்கிய கடலிலுள்ள அலையின் நீர்த்துளிகள் அத்தேரின் சக்கரங்களை நனைக்க இப்பொழுது என்னைப் பிரிந்து சென்றான்; பசலையானது இதனை எப்படி அறிந்தது? எனது மணம் கமழ்கின்ற அழகிய நெற்றியிடத்துஅது பரவா நிற்கின்றது.
முடிபு: தோழி, சேர்ப்பன் ஏறி நனைப்பச் சென்றனன்; பசப்புயாங்கறிந்தன்று கொல்? நுதலில் ஊர்தரும்.
கருத்து: தலைவன் பிரிவினால் யான் பசலை நோயுற்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 205. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, தோழி, ஊர்தரும், தலைவன், சங்க, எட்டுத்தொகை, சேர்ப்பன்