குறுந்தொகை - 19. மருதம் - தலைவன் கூற்று
(தலைவி ஊடிய போது அவ்வூடலைத் தான் தெளியச் செய்யவும் தெளியாளாகிப் பின்னும் ஊடிய காலத்தில் தலைவன், “இவள் தன் பழைய தன்மை மாறி நம்மோடு உறவில்லாள் போல் இருக்கின்றாள்” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவல் நாறும் பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. |
5 |
- பரணர். |
நெஞ்சே! மனைப் படப் பையில் உள்ள மரத்தின்மீது படர்ந்த ஒளியை உடைய முல்லை மலர்கள் மணம் வீசுதற்கிடமாகிய பலவாகிய கரிய கூந்தலை உடைய இவள் இனி நம் திறத்தில் எத்தகைய உறவினை உடையவளோ! ஏதிலள்போலும் ; ஆதலால் எவ்வி என்னும் உபகாரியை இழத்தலால் உண்டாகிய வறுமையை உடைய யாழ்ப்பாணரது பொற்பூ இல்லாத வறிய தலையானது பொலிவிழந்து இருத்தல்போல பொலிவிழந்து வருந்துவாயாக.
முடிபு: நெஞ்சே, கூந்தல் நமக்கு யாரளோ! ஆதலின், பாணர் தலைபோலப் புல்லென்று இனைமதி.
கருத்து: இவள் இப்பொழுது வேறுபாடுடையளானாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 19. மருதம் - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், நெஞ்சே, மருதம், குறுந்தொகை, கூற்று, உடைய, யாரளோ, இவள், பொலிவிழந்து, கூந்தல், ஊடிய, எட்டுத்தொகை, சங்க, எவ்வி, பாணர்