குறுந்தொகை - 188. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி,“கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.)
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு தகைமுற் றினவே தண்கார் வியன்புனம் வாலிழை நெகிழ்த்தோர் வாரார் மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே. |
|
- மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார். |
தோழி! முல்லைக்கொடிகளில் அரும்பு முதிர்ந்தன; தண்ணிய கார்காலத்தைஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களோடுஅழகு முதிர்ந்தன; எனதுமாட்சிமைப் பட்ட அழகைக் கெடுத்தலை எண்ணி மாலைக் காலம் வந்தது; என்னைப் பிரிந்து என் தூய ஆபரணங்களைநெகிழச் செய்த தலைவர் இன்னும் வந்தாரல்லர்.
முடிபு: முல்லை முகை முற்றின; புனம் தகை முற்றின; மாலைவந்தன்று; இழை நெகிழ்த்தோர் வாரார்.
கருத்து: கார்காலம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 188. முல்லை - தலைவி கூற்று, முல்லை, இலக்கியங்கள், தலைவி, தலைவர், குறுந்தொகை, கூற்று, வாரார், முற்றின, நெகிழ்த்தோர், முதிர்ந்தன, இன்னும், எட்டுத்தொகை, சங்க, வந்திலர், றினவே