குறுந்தொகை - 169. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் தன்பால் பரத்தைமை இல்லையென்று தலைவியினிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, தலைவி, “எம் உயிர் நீங்குவதாக!” என்று கூறியது.)
சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற் றெற்றென இறீஇயரோ ஐய மற்றியாம் நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே பாணர், பசுமீன் சொரிந்த மண்டைபோல எமக்கும் பெரும்புல வாகி |
5 |
நும்மும் பெறேஎம் இறீஇயரெம் முயிரே. | |
- வெள்ளிவீதியார். |
ஐய! யாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள் பாலை நிலத்திற் செல்லும் யானையினது மலையைக் குத்திய கொம்பைப் போல விரைவாக முறிவனவாக; எமது உயிர் பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி உம்மையும் யாம் பெறேமாய் அழிக.
முடிபு: ஐய, யாம் நக்க எயிறு இறீஇயர்; எம் உயிர் எமக்கும் புலவாகி நும்மும் பெறேஎம் இறீஇயர்.
கருத்து: இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 169. மருதம் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, மருதம், யாம், எமக்கும், உயிர், கூற்று, குறுந்தொகை, எட்டுத்தொகை, நும்மோடு, இறீஇயர், பெறேஎம், நும்மும், பாணர், சங்க, நக்க