குறுந்தொகை - 170. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை யாற்றாளெனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை யான் அறிந்துள்ளேன்; பலர் தமக்குத் தோற்றியவற்றைச் சொல்லுக. அதனால் யான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)
பலவும் கூறுகவ தறியா தோரே அருவி தந்த நாட்குர லெருவை கயனா டியானை கவள மாந்தும் மலைகெழு நாடன் கேண்மை தலைபோ காமைநற் கறிந்தனென் யானே. |
5 |
- கருவூர்கிழார். |
தோழி! அருவியால் தரப்பட்ட காலத்தில் விளைந்த கொத்தையுடைய கொறுக்காந்தட்டையை ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானையானது கவளமாக உண்ணும் மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு கெடாமையை நன்றாக அறிந்தனென்; அதனை அறியாதோராகிய பலரும் தமக்குத் தோற்றியவற்றைக் கூறுக.
முடிபு: யான், நாடன்கேண்மை தலைபோகாமை அறிந்தனென்; அஃது அறியாதோர் பலருங் கூறுக.
கருத்து:தலைவன் என்னை வரைந்து கொள்வானென்னும் துணிவுடையேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 170. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், யான், கூற்று, குறுந்தொகை, குறிஞ்சி, தமக்குத், அறிந்தனென், கூறுக, தலைவன், எட்டுத்தொகை, சங்க, காலத்தில்