குறுந்தொகை - 164. மருதம் - காதற்பரத்தை கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட காதற்பரத்தை, தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியை நோக்கிக் கூறுவாளாய், “தலைவி குறை கூறுதற்குரிய குற்றம் உடையேமெனின் எம்மைக் கடல் வருத்துக” என்று சொல்லியது.)
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம் தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி மனையோள் மடமையிற் புலக்கும் |
5 |
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே. | |
- மாங்குடி மருதனார். |
தோழி! தலைவி தன் அறியாமையாற் புலப்பதற்குக் காரணமாகிய அத் தன்மையேமாக தலைவன் திறத்து நாம் ஆயினோமாயின் திரண்ட கொம்பையுடைய வாளை மீனினது நிறைந்த கருப்பத்தையுடைய மடப்ப மிக்க பெண்ணானது கொத்தையுடைய தேமாவினது உதிர்ந்த இனிய பழத்தை கவ்வுதற்கிடமாகிய மிகப் பழைய வேளிருக்குரிய குன்றூருக்குக் கிழக்கின் கண்ணுள்ளதாகிய தண்ணிய பெரிய கடல் எம்மை வருத்துவதாக.
முடிபு: தோழி, மனையோள் புலக்கும் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின், பவ்வம் அணங்குக.
கருத்து: தலைவி அறியாமையால் எம்மைக் குறைகூறுகின்றாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 164. மருதம் - காதற்பரத்தை கூற்று, இலக்கியங்கள், காதற்பரத்தை, மருதம், தோழி, தலைவி, கூற்று, குறுந்தொகை, அணங்குக, புலக்கும், மனையோள், பவ்வம், வாளை, எட்டுத்தொகை, எம்மைக், கடல், சங்க