குறுந்தொகை - 153. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் வரையாமல் நெடுங்காலம் வந்து அளவளாவுதலால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “இனி அவரை வாரற்கவென்று கூறுவாயாக” என, தோழி தலைவியை, “அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாது?” என வினவ, “அவர் வரும் வழியின் ஏதமறிந்து எனக்கு ஆற்றாமை உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)
குன்றக் கூகை குழறினும் முன்றிற் பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சுமன் அளித்தெ னெஞ்ச மினியே ஆரிருட் கங்குல் அவர்வயிற் சாரல் நீளிடைச் செலவா னாதே. |
5 |
- கபிலர். |
என் நெஞ்சம்! குன்றிலுள்ள பேராந்தை ஒலித்தாலும் முற்றத்திலுள்ள பலாமரத்தினது பெரிய கிளையினிடத்து ஆண் குரங்கு தாவித் துள்ளினாலும் அச்சத்தை முன்பு அடையும்; அது கழிந்தது; இப்பொழுது செல்லுதற்கரிய இருளையுடைய இரவில் அவரிடத்தே மலைச்சாரற் கண்ணுள்ள நெடுவழியில் செல்லுதலை நீங்காது; அஃது இரங்குதற்குரியது.
முடிபு: என் நெஞ்சம் அஞ்சுமன்; இனி அவர்வயின் செலவு ஆனாது; அளித்து.
கருத்து: தலைவர் இரவில் வருதலின், ஆற்றின் ஏதம் அஞ்சி வருந்துகின்றேன்,
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 153. குறிஞ்சி - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, இரவில், நெஞ்சம், எட்டுத்தொகை, சங்க, அஞ்சுமன்