குறுந்தொகை - 152. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் வரையாது இருந்தமையின் வருந்திய தன்னை இடித்துரைத்த தோழியை நோக்கி முன்னிலைப் புறமொழியாக, “என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவர் உடனுறைவதன் இன்றியமையாமையையும் உணர்ந்திலர்” என்று தலைவி கூறியது.)
யாவதும் அறிகிலர் கழறு வோரே தாயின் முட்டை போலவுட் கிடந்து சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே. |
5 |
- கிளிமங்கலங்கிழார். |
தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்காற் காண்டலால் வளருந்தன்மையையுடைய காமமானது அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால் தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல உள்ளத் துள்ளே கிடந்து மெலியினன்றி வேறு என்ன உறுதியை உடையது? என்னை இடித்துரைப்போர் இதனைச் சிறிதேனும் அறிந்திலர்.
முடிபு: காமம், காதலர் விடின், சாயினல்லது பிறிதெவனுடைத்து? கழறுவோர் யாவதும் அறிகிலர்.
கருத்து: தலைவர் விரைவில் வரைகிலரேல் காமம் பயனற்றுக் கெடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 152. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, கிடந்து, முட்டை, காமம், அறிகிலர், காதலர், நோக்கி, எட்டுத்தொகை, சங்க, இடித்துரைப்போர், தலைவர், யாவதும்