குறுந்தொகை - 150. குறிஞ்சி - தலைவி கூற்று
(தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவிக்கு அதனைத் தெரிவிப்ப, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; புல்லினால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தன் உடம்பாட்டைத் தெரிவித்தது.)
சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும் ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம் உள்ளின் உண்ணோய் மல்கும் புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய் |
5 |
- மாடலூர் கிழார். |
தோழியே மரத்தின் உச்சியிற் பரணின் மீது இருக்கும் குறவன் கொளுத்திய நன்மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல இடந்தோறும் ஒளியை வீசும் ஓங்கிய மலை நாட்டையுடைய தலைவனது பூசிய சந்தனம் புலர்ந்த மார்பினை யான் நினைத்தால் என் உள்ளத்தின்கண் காமநோய் பெருகும்; அம் மார்பை அணைந்தால் அந்நோய் இல்லையாதல் என்ன ஆச்சரியம்!
முடிபு: அன்னாய், நாடன் மார்பு உள்ளின் நோய் மல்கும்; புல்லின் மாய்வது எவன்?
கருத்து: தலைவனைக் கண்டு அளவளாவினாலன்றி என் நோய் தீர்வதில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 150. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, மல்கும், உள்ளின், அன்னாய், நோய், நாடன், புல்லின், நினைத்தால், சங்க, எட்டுத்தொகை, மார்பு, காமநோய், காரணமாக, அந்நோய்