குறுந்தொகை - 140. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்தில் அவனுடைய பிரிவினால் துன்புற்ற தலைவியை நோக்கி, “நீ ஆற்றாமல் இருக்கின்றாய்” என்று தோழி இரங்கினாளாக, “இவ்வூர் இப்பொழுது யான் டுந்துன்பத்தை எங்ஙனம் அறிந்தது?” என்று முன்னிலைப் புறமொழியாகத் தலைவி கூறியது.)
வேதின வெரிநின் ஓதிமுது போத்து ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும் சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து ஈங்கியான் தாங்கிய எவ்வம் யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. |
5 |
- அள்ளூர் நன்முல்லையார். |
தலைவர் கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது வழிச்செல்லும் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளும்படி தங்குகின்ற பாலைநிலத்திற் சென்றனர் வலிமை யழிந்து அவர் பிரிந்த பிறகு இங்கே இருந்து யான் பொறுத்துக் கொண்டுள்ள துன்பத்தை இரங்குதலையுடைய இவ்வூர் எவ்வாறு அறிந்தது?
முடிபு: காதலர் சுரன் சென்றனர்; இவ்வூர் யான் தாங்கிய எவ்வம் யாங்கு அறிந்தன்று.
கருத்து: தலைவர் பிரியுங் காலத்து அவரைச் செல்லாதவாறு செய்யாமல் இப்பொழுது என்னை, “நீ ஆற்றுகின்றிலை” என்று கூறிப் பயனில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 140. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, சென்றனர், யான், குறுந்தொகை, கூற்று, பாலை, தாங்கிய, தலைவர், இவ்வூர், காதலர், எவ்வம், இப்பொழுது, எட்டுத்தொகை, சங்க, பிரிந்த, அறிந்தது