குறுந்தொகை - 130. பாலை - தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் இவ்வுலகில் எங்கேனும் ஓரிடத்தில் இருப்பார்; அவரைத் தேடித் தருவேன்” என்பதுபடத் தோழி கூறியது.)
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரும் உளரோநம் காதலோரே. |
5 |
- வெள்ளி வீதியார். |
தோழி! நம்முடைய தலைவர் சித்தி பெற்ற சாரணரைப்போலப் பூமியைத் தோண்டி உள்ளே புகார்; ஆகாசத்தின் கண் ஏறார்; குறுக்கிடுகின்ற பெரிய கடலின்மேல் காலினால் நடந்து செல்லார்; நாடுகள் தோறும் ஊர்கள் தோறும் முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்படாமல் தப்புவாரும் உள்ளாரோ? இரார்.
முடிபு: நம் காதலோர் புகாஅர்: ஏறார்; செல்லார்; தேரிற் கெடுநரும் உளரோ?
கருத்து: தூதுவிட்டுத் தலைவரைத் தேடித் தருகுவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 130. பாலை - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், செல்லார், பாலை, தோறும், கூற்று, குறுந்தொகை, ஏறார், குடிமுறை, கெடுநரும், ஊரின், தேரிற், புகாஅர், எட்டுத்தொகை, சங்க, தேடித், நாட்டின்