குறுந்தொகை - 128. நெய்தல் - தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைக் குறியிடத்திற் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்டற் கரியள்; நீ துன்புறற்குரியை” என்று கூறியது.)
குணகடல் திரையது பறைதபு நாரை திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச் சேயல் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. |
5 |
- பரணர். |
நெஞ்சே! கீழ் கடல் அலைக்கு அருகிலுள்ளதாகிய முதுமையால் சிறகுகள் நீங்கப்பெற்ற நாரை திண்மையாகிய தேரையுடைய சேரனது மேல்கடற் கரையிலமைந்த தொண்டி யென்னும் பட்டினத்தின் கடற்றுறையின் முன் உள்ள அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும்பொருட்டு தலையை மேலே எடுத்தாற்போல நெடுந்தூரத்திலுள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை பெறுவதற்கு நினைந்தாய்; நீ வருத்தத்தையுடையை துன்பத்துக்குக் காரணமாகிய ஊழ்வினையையுடையை.
முடிபு: நெஞ்சே, அரியோட் படர்தி; நோயை; நோய்ப்பாலோய்.
கருத்து: இனித் தலைவி நாம் பெறற்கரியள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 128. நெய்தல் - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், நெய்தல், நெஞ்சே, கூற்று, குறுந்தொகை, அரியோட், படர்தி, நோயை, அயிரை, தலைவி, எட்டுத்தொகை, சங்க, நாரை, தொண்டி