குறுந்தொகை - 108. முல்லை - தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வந்திலர்; யான் உய்யேன்” என்று வருந்திக் கூறியது.)
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக் கறவை கன்றுவயிற் படரப் புறவிற் பாசிலை முல்லை ஆசில் வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று உய்யேன் போல்வல் தோழி யானே. |
5 |
- வாயிலான் தேவனார். |
தோழி! மேகங்கள் விளையாடுதற்கிடமாகிய மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு அகன்றிருந்த பசுக்கள் தம் கன்றுகளினிடத்தே நினைந்து செல்ல முல்லை நிலத்தில் பசிய இலைகளையுடைய முல்லையினது குற்றமில்லாத சிறந்த மலர்ப் பரப்பு செக்கர் வானத்தின் அழகைக் கொண்டது; இக் கார்ப்பருவத்து மாலையில் தலைவர் வாராமையின் யான் உயிர் வாழேன்.
முடிபு: தோழி, முல்லை வான்பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று; யான் உய்யேன்.
கருத்து: கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனிப் பொறுத்திரேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 108. முல்லை - தலைவி கூற்று, முல்லை, தலைவி, இலக்கியங்கள், தலைவர், தோழி, கூற்று, குறுந்தொகை, யான், கொண்டன்று, உய்யேன், செவ்வி, கார்ப்பருவம், எட்டுத்தொகை, சங்க, வான்பூச், செவ்வான்