குறுந்தொகை - 106. குறிஞ்சி - தலைவி கூற்று
(பரத்தையிற் பிரிந்த தலைவன் தான் குறைவில்லா அன்புடையனென்று கூறித் தூது விடுப்ப, அதனையறிந்த தலைவி, “தலைவர் உள்ளத்தாற் பொய்யாது அன்புடையராயின் யாமும் பழைய அன்புடையே மென்பதை அவருக்குக் கூறி விடுப்போம்” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் வாயில் நேர்ந்ததைப் புலப்படுத்தியது.)
புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி அருவியின் தோன்றும் நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமும் நெய்பெய் தீயின் எதிர்கொண்டு |
5 |
தான்மணந் தனையமென விடுகந் தூதே. | |
- கபிலர். |
தோழி! புல்லிய விழுதை யுடைய இற்றிமரத்தினது மலையிலுள்ள கற்களிற் படர்கின்ற வெள்ளிய வேர் மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப்போலத் தோன்றும் நாட்டையுடைய தலைவன் குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது நம்மிடத்து வந்தது; நாமும் நெய்யைப் பெய்த தீயைப்போல அத்தூதை ஏற்றுக்கொண்டு அவன் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி தூதுவிடுவேம்.
முடிபு: தோழி, நாடன் தீதில் நெஞ்சத்துக்கிளவி வந்தன்று; நாமும் எதிர்கொண்டு தூதுவிடுகம்.
கருத்து: தலைவனை நாம் ஏற்றுக் கொள்வோமாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 106. குறிஞ்சி - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, தோழி, குறிஞ்சி, நாமும், கூற்று, குறுந்தொகை, தீதில், வந்தன்று, எதிர்கொண்டு, நாடன், தான், சங்க, எட்டுத்தொகை, தலைவன், தூது, கூறி, தோன்றும்