குறுந்தொகை - 104. பாலை - தலைவி கூற்று
(தலைவன் நெடுங்காலம் பிரிந்துறைந்தானாக அப்பிரிவை ஆற்றாத தலைவி, “ பின்பனிப் பருவத்திற் பிரிந்த தலைவர் பலநாள் செல்லவும் மீண்டு வந்திலர்; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!” என்று கூறியது.)
அம்ம வாழி தோழி காதலர் நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத் தாளித் தண்பவர் நாளா மேயும் பனிபடு நாளே பிரிந்தனர் பிரியும் நாளும் பலவா குபவே. |
5 |
- காவன் முல்லைப்பூதனார். |
தோழி! ஒன்று கூறுவன்; கேட்பாயாக; நம் தலைவர் நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க குளிர்ந்த தாளியறுகின் கொடியை விடியற்காலத்தில் பசுக்கள் மேயும் பனி வீழ்கின்ற காலத்திலே என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும் பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!
முடிபு: தோழி, காதலர் பனிபடு நாளே பிரிந்தனர்; பிரியும் நாளும் பல ஆகுவ.
கருத்து: தலைவர் காலமல்லாத காலத்திற் பிரிந்ததோடன்றிப் பல நாட்களாகியும் மீண்டாரிலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 104. பாலை - தலைவி கூற்று, தலைவர், இலக்கியங்கள், தலைவி, தோழி, பாலை, குறுந்தொகை, கூற்று, பிரிந்தனர், நாளே, நாளும், பிரிந்து, குளிர்ந்த, பனிபடு, பிரியும், ஆற்றுவேன், சங்க, எட்டுத்தொகை, நான், எங்ஙனம், காதலர், மேயும்