அகநானூறு - 207. பாலை
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் |
5 |
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் |
10 |
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் கூழை உளர்ந்து மோழைமை கூறவும், |
15 |
மறுத்த சொல்லள் ஆகி, வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே? |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 207. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, குறைக், எட்டுத்தொகை, சங்க