அகநானூறு - 205. பாலை
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப் பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே |
5 |
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, |
10 |
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற விழு நிதி எளிதினின் எய்துகதில்ல மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, |
15 |
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, |
20 |
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 205. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, விளங்கு, எட்டுத்தொகை, சங்க