கானல் வரி - சிலப்பதிகாரம்
19.மறக்க மாட்டார் !
வேறு
(சாயல் வரி)
(சாயல் வரி)
கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்தல் அழித்துப் போனா ரொருவர் பொய்தல் அழித்துப் போனா ரவர்நம் மையல் மனம்விட் டகல்வா ரல்லர். |
43 |
கானல் வேலிக் கழிவாய் வந்து நீநல் கென்றே நின்றா ரொருவர் நீநல் கென்றே நின்றா ரவர்நம் மானேர் நோக்க மறப்பா ரல்லர். |
44 |
அன்னந் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றா ரொருவர் நென்னல் நோக்கி நின்றா ரவர்நம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர். |
45 |
தாழை மரங்கள் வேலியாக இருந்து காக்கும் இந்தக் கடல் சார்ந்த நிலத்திலே,முன்பு ஒருவர் வந்திருந்தார்.வந்தவர் நாம் விளையாடியப் பொய்தல் விளையாட்டையே மறக்குமாறு செய்து சென்றார்.அவர் மேல் மயக்கம் கொண்ட நம் மனத்தைவிட்டு,அவர் இன்றளவும் அகலவில்லை !
கடற்கரைச் சோலையை வேலியாக உடைய இக்கழியில்,முன்னர் ஒருவர் வந்திருந்தார்.‘நீ அருள் செய்வாய்’, என்று சொல்லி வேண்டி நின்றிருந்த அவர்,நம் மான் போன்ற பார்வையை மறக்க மாட்டார் அல்லவா !
நேற்று,அன்னம் தன் துணையோடு இன்பமாக ஆடுவதைக் கண்டு,அதனையே நோக்கி நின்றார் ஒருவர்.அங்ஙனம் நின்ற அவர்,பொன்னிறத்தில் நம் மேனிமீது படர்ந்திருந்த பசலைப் போல,நம்மை விட்டு நீங்கமட்டார் அல்லவா !
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]