கானல் வரி - சிலப்பதிகாரம்
16.மறக்க மாட்டோம்
(தலைவியுடன் சேர்ந்து இன்புற்று இருந்த தலைவன்,ஏதோ சில காரணங்களால் அவளைச் சந்திக்க வரவில்லை.பிரிவு துயரால் வாடிய தலைவி,நாரையை நோக்கித் தன்னிலை கூறி அதனைத் தலைவனிடம் கூறுமாறு வேண்டுகிறாள்)
வேறு
(திணை நிலைவரி)
(திணை நிலைவரி)
தம்முடைய தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால். |
32 |
புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல் துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால் இன்கள்வாய் நெய்தால்நீ யெய்துங் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ. |
33 |
புள்ளியன்மான் தேர்ஆழி போன வழியெல்லாந் தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்தாய்மற் றென்செய்கோ தெள்ளுநீர் ஓதஞ் சிதைத்தாய்மற் றெம்மோடீங்கு உள்ளாரோ டுள்ளாய் உணராய்மற் றென்செய்கோ. |
34 |
நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற வோதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே. |
35 |
நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டேர் ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய்வாழி கடலோதம் ஊர்ந்தவழி சிதைய ஊர்ந்தாய்மற் றெம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடலோதம். |
36 |
தனது அன்பு உள்ளத்தையும்,தன்னையும்,தன் குதிரை பூட்டிய தேரையும்,என்னையும் நினைக்க மறந்து விட்டாரோ !அப்படியே கைவிட்டு விட்டுப் போகட்டும் !அழகிய நெருங்கிய மென்மையான சிறகுகளை உடைய அடும்புகளே!அன்னங்களே!ஆனாலும்,நம்மை மறந்த அவரை,நாம் என்றும் மறக்க மாட்டோமே !
துயரம் அதிகரிக்கும் மாலைப்பொழுதில்,பிரிவு தரும் தனிமையால் வருந்துகின்ற என் கண்ளைப் போலத் துன்பத்தால் வருந்தாமல்,இனிதாக ஆழ்ந்து நீ உறங்குகின்றாயே !இனிய கள் ஊறும் வாயையுடைய நெய்தல் மலரே!நீ காண்கின்ற கனவில்,கொடியவரான என் காதலர் இக் கானற்சோலைப் பக்கம் வந்தாரா? வந்தால் என் நிலையாமையை நீயாவது அவரிடம் எடுத்துச் சொல் !
தெளிந்த நீரினை உடைய கடலே!பறவைகள் போல வேகமாகச் சென்றிடும் குதிரைகள் பூட்டிய என் காதலனின் தேர் சக்கரங்கள் சென்ற வழி முழுதையும்,உன் அலைகளால் நீ சிதைத்து நிற்கிறாய்!இனி நான் என்ன செய்வேன்?அவ்வாறு சிதைத்த நீ,இங்கே இந்த இடத்தில் என்னுடன் இல்லாத காதலரோடு சேர்ந்துகொண்டு எனக்குத் துன்பம் அளிக்கிறாய்!என் நோயை என் காதலரைப் போல நீயும் உணரவில்லையா?நீயும் உணரவில்லை என்றால்,நான் இனி என்ன செய்வேன்?
முன்பு அன்புடன் பழகிய காதலனின்,சக்கரம் பொருந்தியப் பெரிய வலிய தேர்சென்ற வழி முழுதையும் அழித்த,பரந்து விரிகின்ற கடல் நீர் வெள்ளமே!குளிர்ந்த மலர்கள் உடையச் சோலையே!துணையுடன் சேர்ந்து மகிழும் அன்னமே!ஈரம் பொருந்திய குளிர்ந்த கடற்கரை நீர்த்துறையே!’இங்ஙனம் என்னைப் பிரிந்து போவது சரி அல்ல’,என்று யாரேனும் அவரிடம் சென்று கூற மாட்டீர்களா !முன்னர் நம்முடன் அன்புடன் கலந்த காதலரின்,உருளையுடைய பெரிய வலிய தேர் சென்ற வழி சிதையும்படி,பரந்து விரிகின்ற கடல் வெள்ளமே!நீ வாழ்வாயாக!முன்பு என்னுடன் அன்புடன் உறவாடிய கடலே!இன்று உன் செயலால் நண்பர் போல நடித்துப் பகைவர் ஆனாய்!என்றாலும் நீ வாழ்வாயாக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]