கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்
2.விஞ்சை வீரன் காதலிக்கு உரைத்தது
(இந்திர விழா பற்றியும்,புகார் நகரின் பெருமைகளையும்,விஞ்சை வீரன் காதலிக்குச் சொன்னான்)
தென்றிசை மருங்கினோர் செழும்பதி தன்னுள் | 5 |
இந்திர விழவுகொண்டு எடுக்குநாள் இதுவெனக் கடுவிசை அவுணர் கணங்கொண் டீண்டிக் கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த தொடுகழன் மன்னற்குத் தொலைந்தன ராகி நெஞ்சிருள் கூர நிகர்த்துமேல் விட்ட |
10 |
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம் திருந்துவே லண்ணற்குத் தேவ னேவ இருந்துபலி யுண்ணும் இடனும் காண்கும் அமரா பதிகாத் தமரனிற் பெற்றுத் தமரிற் றந்து தகைசால் சிறப்பிற் |
15 |
பொய்வகை யின்றிப் பூமியிற் புணர்த்த ஐவகை மன்றத் தமைதியுங் காண்குதும் நாரதன் வீணை நயந்தெரி பாடலும் தோரிய மடந்தை வாரம் பாடலும் ஆயிரங் கண்ணோன் செவியகம் நிறைய |
20 |
நாடகம் உருப்பசி நல்கா ளாகி மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவளெனச் சாபம் பெற்ற மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய அங்கரவு அல்குல் ஆடலுங் காண்குதும் |
25 |
துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே அமரர் தலைவனை வணங்குவதும் யாமெனச் |
அப்போது அவன் காதலியிடம்,
‘தென்திசையில் உள்ள வளம்செறிந்த புகார் நகரில்,இந்திர விழாவினை மேற்கொள்வோர் கொடியேற்றும் நாள் இது‘ என்றான்.
மேலும் அவன் அவளிடம்,
“முன்பொருநாள்,மிக்க வேகமுடைய அசுரர்கள் கூட்டமாக வந்து தேவர்களை எதிர்த்தனர்.கொடிய புலியின் வலிமையுடைய,வீரக்கழல் அணிந்த முசுகுந்த மன்னன்,அப்போது இந்திரனது நகரை காத்தான்.அசுரர்கள் அவனை எதிர்த்து நிற்க முடியாமல் அழிந்தனர்.எனினும்,அசுரர் கூட்டம் நெஞ்சில் இருந்த பகைமையினால்,இருள்கணை ஒன்றினை முசுகுந்த மன்னன் மீது ஏவியது.முசுகுந்தன் ஏவலுக்காக இந்திரன் விட்டுச்சென்ற காவல் பூதம் இருளை நீக்கியது.பின்னர்ச் சோழர்க்குரிய புகார் நகரிலே அது என்றும் தங்கியிருந்தது.அது பலிபெற்று வரும் நாளங்காடியை நாம் காண்போம்.
முன்னர் அமராவதி நகரைக் காத்தமையால்,அதற்குக் கைமாறாக இந்திரனால் அளிக்கப்பட்டுச் சோழரிடையே வழிவழியாகத் தரப்பட்டு வரும்,அழகு மிகுந்த சிறப்பினையுடைய,என்றும் பொய்க்காமல் நிலைபெற்ற தனித்தன்மையுடன் புகார்நகரில் அமைக்கப்பட்ட ஐவகை மன்றங்களின் பெருமைகளையும் காண்போம்.
அன்றொரு நாள்,இந்திரன் அவையில் அகத்தியரை வரவேற்க,நாரத முனிவன் இசையின்பம் சிறக்கப் பாடும் யாழ்ப் பாடலும்,தோரிய மடந்தையர் பாடிய வாரப் பாடலும் ஒலித்தன.இதைக் கேட்டு ஆயிரம் கண்ணுடைய இந்திரன் செவிகள் முழுதும் நிறைந்திருந்தன.அவ்வேளை இந்திரகுமாரன் சயந்தன் அழகில் மயங்கிய ஊர்வசியின் நடனம் செயல் இழந்தது.அதனால் நாரதனின் வீணையும் மங்கலம் இழந்தது.இதனால்,’இவள் மண்ணுலகம் சென்று மானிட மகளாகப் பிறக்க’ எனக் கொடிய சாபம் பெற்றாள் ஊர்வசி.அச்சாபத்தால்,ஊர்வசியானவள் ‘மாதவி’ என்னும் நடனமங்கையாகப் பூமியில் பிறந்தாள்.அந்த மாதவியின் பரம்பரையிலே வந்து தோன்றிய,பாம்பு போன்ற அல்குலையுடைய ‘மாதவி’ என்னும் ஒருத்தியும் நடனமாடுவாள்.அதனையும் காண்போம்.
‘செக்கச் சிவந்த வாய் இதழும்,உடுக்கை போன்ற இடையும் உடையவளே!அங்கே சென்று நாமும் அமரர் தலைவனை வணங்கி வரலாம்’”,
என்று புகார்நகரச் சிறப்பினை பலவாறு கூறி,அவளை தம்முடன் புகார் நகரம் செல்ல அழைத்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]