இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்
8.ஐவகை மன்றம்
(புகாரில் இருந்த ஐவகை மன்றங்கள்)
அன்றியும், வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் |
115 |
கொட்பி னல்லது கொடுத்த லீயாது உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரும் முழுகின ராடிப் பழுதில் காட்சி நன்னிறம் பெற்று |
120 |
வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் வஞ்ச முண்டு மயற்பகை யுற்றோர் நஞ்ச முண்டு நடுங்குதுய ருற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் |
125 |
சுழல வந்து தொழத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் தவமறைந் தொழுகுந் தன்மை யிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர் |
130 |
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காத நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும் அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து |
135 |
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீ ருகுத்துப் பாவைநின் றழூஉம் பாவை மன்றமும் மெய்வகை யுணர்ந்த விழுமியோ ரேத்தும் ஐவகை மன்றத்தும் அரும்பலி யுறீஇ |
140 |
வெள்ளி மன்றம்
வேற்றுப் பகுதியிலிருந்து வந்த புதியோர்,தம் பொருட்கள் இருந்த மூட்டைகளில் பெயர் எழுதிய அடையாள எழுத்தினை இலச்சினையாகப் பொறித்தப் பலவகை ஏற்றுமதிப் பண்டங்கள்,பண்டகசாலையில் குவிந்து கிடந்தன.
அப்பண்டகசாலையில் வாயிலோ,வலுவான காவற்பணி செய்வோரோ,அந்த பொருள்களுக்கு உரிமையாளரோ எவருமில்லை.அவ்வற்றைக் களவாட நினைப்பவர் கழுத்து முறியுமளவு கனமான பொதிகளை அவர் தலையில் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வர்.தமக்கு வரும் கேட்டுக்கு அஞ்சி களவாட எண்ணுபவர்கள் அனைவருமே நடுங்குவர்.’வெள்ளிமன்றம்’ என்று அழைக்கப்பட்ட அத்தகைய பண்டகசாலையும் அங்கே இருந்தது.
இலஞ்சி மன்றம்
கூனர்,குள்ளர்,ஊமையர்,செவிடர்,உடல் அழுகும் நிலையில் உள்ள தொழுநோயாளரும் மூழ்கி நீராடிய அளவிலே பழுதில்லாத தோற்றத்தைக் கொண்ட நல்ல உருவத்தைப் பெற்று வலம் வந்து தொழுது செல்கின்ற பொய்கையைக் கொண்ட ‘இலஞ்சி மன்றம்’ ஒன்றும் அங்கே இருந்தது.
ஒளிக்கல் நின்ற மன்றம்
வஞ்சனையால் சிலர் மருந்தூட்ட,அதனை அறியாது உண்டு மனதில் பித்து ஏறியவர்களும்,நஞ்சினை உண்டு நடுங்கவைக்கும் துயரம் உற்றவர்களும்,நஞ்சுடைய நாகப்பாம்பின் கூரிய பற்கள் அழுந்தப் பாம்புக்கடி பட்டாரும்,முழி பிதுங்கிக் காணப்படும் பேயினால் பிடிக்கப்பட்டுக் கடுந்துன்பப் பட்டவரும் ,ஒருமுறை சுற்றி வந்து தொழுது நின்ற அளவிலேயே துயரனைத்தும் போக்கிவிடுகின்ற ஒளிவீசும் நெடிய ‘ஒளிக்கல் நின்ற மன்றம்’ ஒன்றும் அங்கே இருந்தது.
பூத சதுக்க மன்றம்
‘தவ வேடத்திலே மறைந்து கொண்டு தகாத தீயச் செயல்களிலே ஈடுபடுன்கின்ற போலித்துறவிகள்;மறைவாகத் தீய ஒழுக்கத்திலே ஈடுபடுகின்ற ஒழுக்கங்கெட்ட பெண்கள்;அரசனுக்கு உட்பகை விளைவிக்க எண்ணும் அமைச்சர்கள்;பிறர் மனைவியை விரும்புபவர்கள்;பொய்சாட்சி சொல்பவர்கள்;புறங்கூறி திரிபவர்கள் அனைவரும் என் கையிலே கொண்டிருக்கும் கயிற்றுக்குள் அகப்படுவர்’ என்று நாற்காததூரமும் கேட்கும்மாறு தன் கடுமையான குரலை எழுப்பி,அவர்களை அவ்வாறே கைப்பற்றி அறைந்து கொன்று உண்ணும் சதுக்கபூதம் நிற்கின்ற ‘பூத சதுக்க மன்றம்’ ஒன்றும் அங்கே இருந்தது.
பாவை மன்றம்
அரசியல் பொறுப்புடையவர் தம் செங்கோலாட்சிலே சற்றே தவறு செய்தாலும்;அறம் வழங்கப்படும் அவைதனில் நீதி நூல் உரைக்கும் நெறிக்கு மாறுபட்டு,ஒரு பக்கம் சார்ந்து தீர்ப்பு வழங்கினாலும்,நாவால் அத்தவறுகளை வெளிப்படச் சொல்லாது,துன்பத்தால் கண்ணீர் சொரிந்து அழுகின்ற பாவையொன்று நின்ற ‘பாவை மன்றம்’ ஒன்றும் புகாரில் இருந்தது.
உண்மையான வாழ்வியல் திறத்தை உணர்ந்த சான்றோரால் போற்றப்படும் அத்தகைய ஐவகை மன்றங்களிலும் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு,மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]