அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்
4.மாதவியும் கோவலனும்
இல்வளர் முல்லையொடு மல்லிகை யவிழ்ந்த பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து செந்துகிர்க் கோவை சென்றேந் தல்குல் அந்துகின் மேகலை யசைந்தன வருந்த |
30 |
நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக் கலவியும் புலவியுங் காதலற் களித்தாங்கு ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக் கோலங் கொண்ட மாதவி யன்றியும் |
மனையிடத்தே வளர்ந்த முல்லையும்,மல்லிகையும் வேறு பலவகைப் பூக்களும் தூவிய மலர்ப் படுக்கையில் ,கோவலனும் மாதவியும் அழகாக அமர்ந்திருந்தனர்.
பரந்து உயர்ந்த தன் அல்குலின் மேலிருக்கும் அழகிய சேலையின் மேலுள்ள பவள வடமும்,மேகலையும்,அசைந்து ஆடி தன் நிலை குலைந்திருக்க,நிலவின் பயனை முற்றும் அனுபவிக்கும் இடமாகிய நெடிய நிலா முற்றத்தில்,தன் காதலனுக்குக் கூடல் இன்பமும்,ஊடல் இன்பமும் மாறி மாறி அளித்த களிப்போடு விளங்கினாள் மாதவி.
அவன்மேல் தீராத ஆர்வம் உடைய நெஞ்சனளாகி,அவனைக் கட்டி தழுவி இன்புற்றாள்.அதனால் கலைந்த தன் ஒப்பனையைச் சரிசெய்தும்,மீண்டும் அவ்வாறே அவனுடன் கூடி மகிழ்வதுமாக,மாதவி,தன் காதலனாகிய கோவலனோடு இன்பத்தில் திளைத்தாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]