தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள்
கடைசியில் என்ன ஆகிறது? கிராமப்புறத்து மக்கள் தங்களது சொந்தமான கலை வடிவங்களை இழந்து வருகிறார்கள். அவர்களுக்குப் 'புதிய விஷயமாகக்' கிடைத்தவை எதுவும் அவர்களது தேவையினை ஈடுசெய்யவில்லை. அதோடு அவர்களை முடமாக்கிச் சூன்யத்தை வெறிக்க வைக்கிறது.
பழைய விஷயங்கள் மீது நம்பிக்கை குறைகிறது. புதிய விஷயங்கள் எதுவும் அவர்களுக்குக் கிட்டவில்லை. மக்கள் மத்தியில் இட்டு நிரப்பப்படாத 'கலாசார வெற்றிடம்' என்பது இருந்துகொண்டே இருக்கிறது. ஒன்றைத் தீர்மானமாகச் சொல்ல முடியும். இக் 'கலாசார வெற்றிடத்தை'தமது வசதிக்கேற்ப மறந்துவிட்டுச் செயல்படுகிற எத்தகைய கலை முயற்சிகளும் தமிழகக் கலாச்சார சூழலை முன்னெடுத்துச் செல்ல உதவாது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.
தமிழ் நாடகச் சூழலில் உள்ள பிரச்னையும் இதுதான். மக்களுக்கு நாடகங்கள் வேண்டும். அவர்களது 'புதுமை'யின் தேடலுக்கு ஈடுகொடுக்கிற அவர்களது ஆன்ம, கலாசார வெற்றிடங்களை இட்டு நிரப்புகிற நாடகங்கள் வேண்டும்.
தமிழ் நாடகச் சூழலில் உள்ள தேக்கமே இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாததுதான் - புரிந்து கொள்ள மறுப்பதுதான்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகர்கள், மாவட்டத் தலைநகர்கள் இவற்றைத் தவிர பெரும்பாலான இடங்களில் நாடக அரங்குகளே இல்லை. இத்தேவைக்கு ஈடுகொடுக்கிற நாடகங்கள் எப்படிச் சாத்தியமாகும் என்ற கேள்வியெழலாம்.
நாடக அரங்குகளே இல்லாத இடங்களில், மைதானங்களில் தெருமுனைகளில், திறந்த வெளிகளில், வயல் வெளிகளில் மக்களைத் தேடிச் சென்று நிகழ்த்தக்கூடிய வீதிநாடகங்கள், திறந்தவெளி நாடகங்கள் இவற்றின் மூலம்தான் இத் தேவையை ஈடு செய்ய முடியும்.
நாடகத்தை நம்பியே ஒரு தொழில் முறை நாடக நடிகன் வாழமுடியாத சூழலில் நாடகம் லாபகரமான ஒரு தொழிலாக இல்லாதபோது இத்தகைய முயற்சிகள் சாத்தியமாகுமா? என்ற கேள்வியும் எழலாம்.
நாடகக் கலையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தன்னார்வத்தோடு இவற்றில் ஈடுபட முன்வரவேண்டும். தமது அழகியல் வெளிப்பாடுகளை வடித்துக் காட்டுகிற ஒரு சாதனமாக மட்டுமல்லாது தமது சமூக கலாசாரக் கடமையை ஆற்றுகிற ஒரு கருவியாகவும் நாடகத்தை கையிலெடுக்க வேண்டும். ஓர் இயக்கமாகச் செயல்பட முன்வர வேண்டும். அப்போதே இது சாத்தியம்.
அது மட்டுமல்ல. இத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வீதிநாடகச் செயல்களை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு நமக்கு இருக்கிறது. யாரோ ஒரு சிலர் மூளையிலிருந்து கிள்ளி எடுத்துப்போட்டு இந்த வளர்ச்சியைக் கண்டுவிட முடியாது. எனவேதான், ஒரு வீதி நாடகக் கலைஞன் தனது கிளர்ச்சிப் பிரசாரப் பணிகளிலேயே திருப்தியடைந்து நின்று விட முடியாது. தமிழ் நாடகச் சூழலுக்கு விடப்பட்டுள்ள சவாலை ஏற்க முன்வரவேண்டும். இந்தத் தேவைகளுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் வீதி நாடகத்தை அவன் வளர்த்தெடுத்தாக வேண்டும். வீதி நாடகத்தின் வீதியின் சூழலில் நிகழ்த்தப்படுகிற திறந்தவெளி நாடகத்தின் உத்திகள், அழகியல், நாடகப்பங்கு இவற்றில் புதிய எல்லைகளைத் தொட முன்வர வேண்டும். ஒரு பரந்துபட்ட 'மக்கள் நாடக இயக்கத்தை' உருவாக்கியாக வேண்டும்.
மக்கள் நாடகம் எனும்போது, ஆட்சியதிகாரத்திற்கும் மக்களுக்கும் அன்றாட வாழ்வில் ஏற்படும் மோதல்கள் முரண்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். மக்களது பொதுவான கலாச்சார ஆன்மதேவைகளை அவை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று சிலர் விளக்கமளிக்கின்றனர்.
உண்மையில் மக்களுக்கும், ஆட்சியதிகாரத்திற்கும் அன்றாட வாழ்வில் ஏற்படும் மோதல்களை, முரண்பாடுகளைத் தவிர்த்துவிட்டு மக்களது கலாச்சார ஆன்ம தேவைகளை மதிப்பீடு செய்யமுடியாது.
மக்கள் நாடகம் என்பது மக்களுக்கே அதிகாரம் என்ற கோட்பாட்டின் அழகியல் ஆன்ம சகோதரிதான்.
எனவேதான் இத்தகைய நாடகச் செயல்பாடுகளின் ஈட்டிமுனையாகக் கிளர்ச்சிப் பிரச்சார நாடகங்கள் விளங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள், வேண்டும், வீதி, நாடகக், நாடகங்கள், மக்கள், நாடகத்தின், நாடகம், சூழலில், நாடக, நாடகச், ஆன்ம, தமது, தமிழ், தமிழில், கலாசார, கலாச்சார, அவர்களது, அழகியல், கட்டுரைகள், கலைக், தேவை, நாடகத்தை, முன்வர, வகையில், முடியாது, ஈடுகொடுக்கும், சிலர், கிளர்ச்சிப், ஏற்படும், முரண்பாடுகளைத், மக்களது, வாழ்வில், அன்றாட, முன்வரவேண்டும், ஆட்சியதிகாரத்திற்கும், மக்களுக்கும், எனவேதான், உள்ள, விஷயங்கள், இட்டு, என்பது, எதுவும், கலைகள், drama, arts, இருக்கிறது, முடியும், திறந்தவெளி, இத்தகைய, வெளிகளில், அரங்குகளே, ஈடுகொடுக்கிற, இடங்களில், இவற்றில்