தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள்
ஜெயந்தனின் 'நிறைகாப்பு' திருமணமான ஒருவனும் ஒருத்தியும் தனியிடத்தில் தங்க நேர்ந்தபொழுது ஒருவரையொருவர் அலாவுவதும், ஆனால் ஆசைப்படாமல் இருப்பது போல் நடிப்பதும், பிரியும் பொழுது தனிமனித ஏமாற்றத்துடன் ஆயின் சமூக மரபைக் காத்த நிறைவுடனும் செல்வது என்பதான கதைப் பொருளுடையது. மனச்சாட்சியை வெளிக்கொணர முயலும் விசாரணையில் ஆண் 'ஆமாம்! நான் இவளை விரும்புகிறேன்' என்கிறான். பெண்ணோ 'பூசி மெழுகுகிறாள்' உண்டு-இல்லை என்பதாகக் குழப்பம் காட்டுகிறாள். காலம் காலமாகக் கட்டப்பட்டிருக்கும் மரபுத் தளையிலிருந்து மீறி, அந்தத் தாலி கட்டியுள்ள பெண்ணால் உண்மை சொல்ல முடியவில்லை. நடிப்பில் பெண், ஆணை விஞ்சுவதும், மனத்தின் ஆழத்தை மேலும் தோண்டிக் கொள்வதற்குமான சமூகக் காரணம் இந்த மரபின் அழுத்தமே என்பதை 'நிறைகாப்பு' விளங்குகிறது. குடும்பமாகிய நிறுவனத்தை இந்நாடகம் கேள்விக்குட்படுத்துகிறது.
பாலியல் வன்முறையின் அவலம் காட்டும் பிரபஞ்சனின் நாடகம் (முட்டை) அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையைப் பிரச்சாரக் கலப்பின்றி கலைவடிவில் தருகிறது. காவல் நிலையங்களில் பாலியல் வன்முறை பொதுவான சமூக நியதிபோல் ஆகிக் கிடப்பதை 'முட்டை' காட்டுகிறது. ஆணாதிக்கமும் அதிகார வெறியும் இணையும் பொழுதில் பெண் ஓர் எறும்பைப் போல் நசுக்கப்படுகிறாள். பெண்களின் சிந்தனை, சமூகப் பங்களிப்பு இவை, "பொம்பள"யின் அறிவின்மையாகக் கருதப்படும் சமூக மதிப்பீடுகள், இந்நாடகத்தில் பெண்ணிய நோக்கில் இணைக்கப்படுகின்றன. பிரபஞ்சனின் 'அகலிகை', அகம் இல்லா ஒருத்தியொடு அறம் நடத்தும் கௌதமர் போன்றோரைச் சாடுகிறது. மனம் பொருந்தா மணத்தில் ஏற்படும் சேதத்தால் குறுகுறுப்பற்ற மற்றொரு தேடலுக்கு அகலிகை முனைவது நாடகத்தில் நியாயப்படுத்தப்படுகிறது. ஆயின் 'எது செய்தபின் மனம் சந்தோஷ’க்கிறதோ, அதுவே அறம்' என்று ராமன் கூறும் நீதி அகலிகைக்குப் பொருந்துகிறது. ஆயின் பொதுவிதியாக்கும் பொழுது?
ஜென்னிமாவின் 'பிணங்கள்' நாடகத்தில், அரசியல் வன்முறையால் ஆதரவற்றுப் போகும் ஒரு பெண்ணின் அவலச் சீறல் குறிப்பிடத்தக்கது.
பரிமாறிக் கொள்ள எதுவுமேயற்ற உலகைப் பற்றிய நிஜந்தனின் நாடகங்களில் இருமைச்சமக் கோட்பாடு, ஆண்குரல், பெண்குரல் வழியே வெளிப்படுகிறது எனலாம். அலுவலகப் பெண்ணுக்கு அதிகாரியால் ஏற்படும் சேதம் (ஒரு நடுக்கமான மீட்சிக்கு) ஓரிடத்தில் நயமாக வெளிப்படுகிறது.
குழந்தைப் பேற்றின் துயரத்தை ஒரு தெய்வீகம் போல் ஆக்கித் தாய்மைக்கு மகுடம் சூட்டும் சமூகப் பொய்மை பற்றிச் சிந்திக்க வைக்கிறது ஞானராஜசேகரனின் 'வயிறு'. கணவன் இருந்தாலும் இறந்தாலும் புறக்கணித்துப் போனாலும் எந்தச் சூழலிலும், குழந்தையென்னும் பெரும் பொறுப்பைத் தோளில் சுமந்திருக்கும் பெண்ணினம் பற்றிய சிந்தனையை இது முன் வைக்கிறது. ஏழைத்தாய்களின் உணவிட முடியாத இயலாமை அவலம் காட்டுவது வயிறு. கருப்பை நீக்கத்தால் பிள்ளைப்பேற்றிலிருந்து விடுதலை பெற நினைக்கும் பெண்ணியம் இச்சூழலில் அறிவுடையதாகிறது. 'பாடலிபுத்திரம்' பெண் ஒரு போகப் பொருள் என்பதை உணர்த்துவதோடு, அடிமைச் சமூகத்தின் அடிமைகளாகவும் பெண்கள் விளங்குவதை எடுத்துக் காட்டுகிறது. "காமம் ஆணுக்குப் பெண்ணைச் சொத்தாக ஆக்கிவிட்டது. தனது சொத்தை வேறு எவனாவது சுரண்டி விடுவானோ என்று கண்காணிப்பதிலேயே ஒவ்வொருவனும் கருத்தாய் இருக்கிறான். காமத்தில் மட்டும் எவனுக்கும் எவள் பேரிலும் நம்பிக்கையில்லை. எவன் பேரிலும் எவளுக்கும் நம்பிக்கையில்லை. கண்காணிப்பு ஒன்றே நடக்கலாகுது" என்று அங்கத நடையில் ஞானராஜசேகரன் இருபாலாரின் உடைமைப் பண்பையும், கற்பு நிலையையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
அரிச்சந்திரனையே குறிக்கோள் மனிதனாகப் புகழும் இந்திய மரபில் 'சந்திரமதி' போன்ற பெண்களின் தியாகமும் சத்திய சோதனையும் மறைந்து போயிருப்பது பற்றிய கே.ஏ.குணசேகரனின் நாடகம் (சத்திய சோதனை) பெண்ணிய நோக்கமுடையது. அவரின் பேயோட்டம்', 'கிராமப்புறப் பெண்களின் மனநிலையை உளவியல் ரீதியில் விளக்க முயல்கிறது. நவீன நாடகங்கள் தொடாத ஒரு புதிய பிரச்சினையைத் தொடுகிறது 'பேயோட்டம்'.
உலகம் முழுவதுமான பெண்ணிய சிந்தனை வளர்ச்சியில் ஈழத்து எழுத்தாளர்கள் பங்கேற்கின்றனர். ஈழத்துத் தமிழரும், தமிழகத் தமிழரும் பண்பாட்டு ரீதியில் ஒத்திருக்கும் சூழலில், ஈழத்து நவீன நாடகங்கள் காட்டும் பிரச்சினைகள் பொதுவான தமிழ்ப் பெண்களின் பிரச்சினைகளாகவே விளங்குகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நவீன நாடகங்களும் பெண்ணியமும் - நாடகக் கலைக் கட்டுரைகள், நவீன, பெண்களின், சமூக, போல், பெண், பற்றிய, பெண்ணிய, நாடகம், தமிழ், ஆயின், நாடகக், கலைக், கட்டுரைகள், பெண்ணியமும், நாடகங்களும், வெளிப்படுகிறது, மனம், ஏற்படும், நாடகத்தில், வைக்கிறது, பேரிலும், பேயோட்டம், ஈழத்து, ரீதியில், அறம், தமிழரும், நாடகங்கள், நம்பிக்கையில்லை, சத்திய, வயிறு, அதிகார, பொழுது, என்பதை, பாலியல், நிறைகாப்பு, கலைகள், drama, arts, அவலம், காட்டும், சிந்தனை, சமூகப், காட்டுகிறது, பொதுவான, பிரபஞ்சனின், முட்டை, அகலிகை