நாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள்
மேற்சொல்லிய நாடக நூல்களெல்லாம் இலக்கண நூல்களாகும். ஒன்றாவது நாடக இலக்கிய நூல் அன்று. அக்காலத்திய இலக்கிய நூல் ஒன்றும் நமக்குக் கிடைத்திலது. 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறல்' மரபாகும். ஆகவே, இலக்கண நூல்களிருந்தால் அவைகளுக்கு முன்பே இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும். அங்ஙனமாயின் அந்நூல்களெல்லாம் மறைந்துபோன காரணத்தை நாம் நன்றாய் ஆராயவேண்டும். இதன் முக்கிய காரணம் என் சிற்றறிவிற்குத் தோன்றுவது என்னவென்றால், அந்நூல்களெல்லாம் அடிக்கடிப் பெயர்த்து எழுதுபவர் இல்லாமற் போனதால் அழிந்து போயின என்பதேயாம். இப்படி இருக்கின், மற்ற மத சம்பந்தமான நூல்களும் காவியங்களும் அடிக்கடிப் பெயர்த்து எழுதப்பட்டபோது நாடக நூல்களை மட்டும் பெயர்த்து எழுதுபவர் ஏன் இல்லாமற் போயினர் என்பது கேள்வியாகும். இதற்கு என்னுடைய பதில், ஆதிகாலத்தில் தமிழ் நடிகர்களும், நடிகைகளும் ஏதோ ஒருவிதமாக மதிக்கப்பட்டனர் என்றே சொல்லவேண்டும்; சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பாயிரத்தில் "நாடகமேத்தும் நாடகக்கணிக்கை" என்னும் சொற்றொடரை விளக்கி எழுதுங்கால் நாடகத்திற்கே ஒரு பெருமை உண்டாக்கிய நாடகக் கணிகை (மாதவி) என்று எழுதியிருக்கிறார். அதற்குப் பின்பாக வரவர நாடகமாடும் ஆண்மக்களும், பெண்டிரும் ஈனநிலையை அடைந்துகொண்டே வந்தனர் என்பதற்கு ஐயமில்லை. கடைசியாகக் கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் நாடகமே மிகுந்த கீழ்நிலையை அடைந்தது என்பதற்குச் சந்தேகமில்லை. அப்படி இருக்குங்கால், கீழ்ப்பட்டவர்களாக மதிக்கப்பட்ட 'கூத்தாடி'களுக்காக நாம் நாடக நூல்களை ஏன் பெயர்த்து எழுதவேண்டும் என்று கைவிட்டிருக்கக்கூடும் என்பது தான் நாடக நூல்கள் மறைந்து போனதற்கு முக்கியமான காரணமாயிருக்கலாம்.
தஞ்சாவூர் பிரகதீசுவரர் ஆலயத்தின் கல்வெட்டு ஒன்றில், வருஷாவருஷம் ஆலயத்தின் உற்சவகாலத்தில் 'ராஜராஜேஸ்வரன்' என்னும் நாடகம் ஆடுவதற்காகத் திருவாளர் விஜயராஜேந்திர ஆசாரியனுக்கும் அவனைச் சார்ந்த நடிகர்களுக்கும் இவ்வளவு நெல் கொடுக்கவேண்டுமென்று வெட்டப்பட்டிருக்கிறது. இது போலவே, இன்னும் சில கோயில்களில் உற்சவகாலங்களில் தமிழ் நாடகங்கள் ஆடப்பட்டதாக அறிகிறோம். இதற்குப்பின் பதினான்காம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்து தென்னாட்டு அரசர்களை முறியடித்துத் தென்னாட்டில் பல கோயில்களை அழித்துச் சென்றனர் என்பது சரித்திர பிரசித்தமான விஷயம். நாடெங்கும் குழப்பமாகி அல்லற்பட்டுக் கொண்டிருந்தபொழுது நாடகங்களை நடிப்பவர் யார்? அவைகளை ஆதரிப்பவர் யார்? ஒரு குடியானவன் தான் விதைத்த தானியத்தின் பலனைத் தான் அடைவானோ இல்லையோ என்று திகில் அடைந்திருக்கும் காலத்தில் கூத்து முதலிய வினோதங்களின் மீது யாருடைய மனம் செல்லும்? ஆகவே, படிப்படியாகக் கீழ்நிலை அடைந்துகொண்டே வந்த தமிழ் நாடகமானது தெருக்கூத்தாய் முடிந்தது. இத் தெருக்கூத்துகளைப் பற்றி உங்களுக்கு நான் அதிகமாய்ச் சொல்லவேண்டியதில்லை. இங்கு ஒரே உதாரணத்தை மாத்திரம் எழுதுகிறேன். பல வருடங்களுக்கு முன் தென்னாட்டு ஜமீன்தார் ஒருவர் கலியாணத்திற்கு நான் போயிருந்த சமயத்தில் ஒருநாள் இரவு பக்கத்துக் கிராமத்தில் தமிழ் நாடகமொன்று ஆடப்போவதாகக் கேள்விப்பட்டு அங்குப் போயிருந்தேன். ஏதோ ஜமீன்தாரின் சிநேகிதர் வந்திருக்கிறாரேயென்று நடிகர்களெல்லாம் வேஷம் பூண்டு வந்து என்னைப் பார்த்து வணங்கினர். அப்போது நீங்கள் என்ன நாடகம் இன்று இரவு ஆடப்போகிறீர்கள்? என்று நான் கேட்டதற்கு அவர்கள் தந்த பதில் என்னை தூக்கிவாரிப் போட்டது. அவர்களுடைய பதிலை அப்படியே எழுதுகிறேன். "எங்களுக்கு நாலைந்து நாடகங்கள் ஆடத்தெரியும்; திரௌபதி துகில் உரிவு, அபிமன்யு கல்யாணம், ஸ்திரி சாகஸம், மார்க்கண்டேயர் நாடகம் - இவைகளில் நீங்கள் எதை ஆடச் சொல்கிறீர்களோ அதை ஆடுகிறோம்" என்றார்கள். ஒரே ஆடையில் மேற்சொன்ன நாடகங்கள் எதையும் ஆடும்படியான சக்தி அவர்களுக்கு இருந்தது என்றால் அக்காலத்தில் தமிழ் நாடகம் எந்த நிலை அடைந்திருந்தது என்று நான் கூறவேண்டியதில்லை. இரவெல்லாம் ஒரு நாடகத்தை ஆடிவிட்டு மறுநாட் காலையில் நடிகர்களெல்லாம் அவர்கள் ஆடிய உடையிலேயே அந்த நாட்டுப்புறத்தின் வீதிதோறும் சென்று நெல் அரிசி முதலியவைகளையும் சொற்பக் காசுகளையும் யாசித்தனர். சுமார் 60 வருடங்களுக்கு முன் தமிழ் நாடகத்தின் கதி இதுவாயிருந்தது.
தமிழ் நாடகம் இந்த நிலையிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தி ஜனங்களின் மதிப்பைப் பெறுவதற்கு வேண்டிய முறையில் வளர ஆரம்பித்த கதையை இனி எழுதுகிறேன்.
ஆயினும் இதற்கிடையில் தமிழ் நாடகத்தைப் பற்றிச் சில சமஸ்கிருத அபிமானிகள் ஏளமாகக் கூறும் ஒரு விஷயத்தை மறுக்க விரும்புகிறேன். அவர்கள் சொல்லுவதாவது:-
ஆதியில் தமிழ்நாடகமே கிடையாது. சமஸ்கிருத மொழியின் தொடர்பு தமிழ் நாட்டிற்குக் கிட்டிய பிறகுதான் தமிழ் நாடகங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பதாம். இது முற்றிலும் தவறான கருத்து என்று இதை நான் மறுக்கவேண்டும். இவ்வாறு கூறுவது எனக்குச் சம்ஸ்கிருத மொழியின் மீது உள்ள வெறுப்பினால் என்று ஒருவரும் எண்ணக்கூடாது என்று நான் வேண்டிக்கொள்கிறேன். சம்ஸ்கிருத மொழியின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. நான் பெரியவனான பிறகு 14 ஆண்டுகள் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியரை வைத்துக் கொண்டு அம்மொழியைக் கற்றேன்; முக்கியமாகச் சாகுந்தலம் முதலிய சிறந்த நாடகங்களைப் படித்து அந்நாடகங்களிலுள்ள பல சிறப்புகளை அறிந்தேன். ஆயினும், 'தமிழ் நாடகமானது சம்ஸ்கிருத நாடகத்திலிருந்து வந்தது; அதைப் பார்த்துக் கற்றுக்கொண்டது' என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். தமிழ் நாடகமானது தானாய்த் தமிழ்மொழியிலேயே உற்பத்தியானது என்பது என் திடமான கொள்கை. இதற்குப் பல காரணங்களை 'நாடகத்தமிழ்' என்னும் சில வருடங்களுக்குமுன் நான் அச்சிட்ட ஒரு நூலில் விவரித்துக் கூறியிருக்கிறேன்; அவைகளையெல்லாம் இங்கு எழுதுவது என்றால் இடமுமில்லை; காலமுமில்லை. அவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு எழுதுகிறேன். சம்ஸ்கிருத நாடகத்தில் அங்கங்கள் எனும் பிரிவு உண்டு. கதாநாயகன் இன்னின்ன குணங்களையுடையவனாயிருக்க வேண்டும் என்ற நியதியுண்டு. அவர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள்; கதாநாயகிகளை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். இவைகளெல்லாம் தமிழ் நாடகத்தில் இல்லை. சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழ் நாடகம் உண்டாயிருந்தால் இவைகளெல்லாம் இருக்க வேண்டுமல்லவா? அன்றியும் இன்னொரு முக்கிய வேறுபாட்டைப் பற்றி எழுதுகிறேன். சம்ஸ்கிருத நாடகத்தின் துவக்கத்தில் சூத்திரதாரன் வருவான் தமிழ் நாடகத்தில் இந்தச் சூத்திரதாரன் இல்லை. ஆனால் கட்டியக்காரன் என்று ஒரு பாத்திரம் மட்டும் உண்டு. சம்ஸ்கிருத அபிமானிகள் கட்டியக்காரன்தான் சூத்திரதாரன் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறாகும். சூத்திரதாரன் சம்ஸ்கிருத நாடகத்தில் முதலில் தோன்றி நாடகத்தை ஆரம்பித்துவிட்டு மறைகிறான். தமிழ் நாடகக் கட்டியக்காரனோ நாடக ஆரம்ப முதல் கடைசிவரையில் மேடையின்மீது இருந்துகொண்டு ஒவ்வொரு புதுப் பாத்திரம் வரும்போதெல்லாம் அதைத் தெரிவிக்கவேண்டியவனாயிருக்கிறான். இன்னும் பல வித்தியாசங்களுமுண்டு. அவைகளைப் பற்றியெல்லாம் நான் இச் சிறு வியாசத்தில் கூறுவதற்கில்லை. நாடக அபிமானிகள் அவைகளைப் பற்றியெல்லாம் நாடகத் தமிழ் என்னும் மேற்குறித்த எனது புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாடகத் தமிழ் - நாடகக் கலைக் கட்டுரைகள், தமிழ், நான், சம்ஸ்கிருத, நாடகம், நாடக, நாடகக், எழுதுகிறேன், என்னும், என்பது, நாடகத்தில், நாடகத், சூத்திரதாரன், மீது, நாடகங்கள், பெயர்த்து, இங்கு, அபிமானிகள், தான், நாடகமானது, மட்டும், மொழியின், இலக்கிய, கலைக், கட்டுரைகள், உண்டு, பாத்திரம், நடிகர்களெல்லாம், அவைகளைப், வருடங்களுக்கு, பற்றியெல்லாம், நீங்கள், முன், இரவு, இல்லை, ஆயினும், பிரித்துள்ளார்கள், பிரிவுகளாகப், சமஸ்கிருத, பிறகு, இவைகளெல்லாம், என்றால், நாடகத்தை, நாடகத்தின், முற்றிலும், இன்னும், அந்நூல்களெல்லாம், வேண்டும், நாம், முக்கிய, அடிக்கடிப், நூல்கள், ஆகவே, arts, drama, கலைகள், இலக்கண, நூல், எழுதுபவர், இல்லாமற், வந்து, நெல், தென்னாட்டு, யார், முதலிய, ஆலயத்தின், மிகுந்த, பதில், நூல்களை, ", அடைந்துகொண்டே, நூற்றாண்டில், பற்றி