ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள்
நாடகக் கதை
ராம நாடகத்தின் கதை, கம்பராமயணத்தைத் தழுவிய கதையே. விதிவிலக்காக இரண்டொரு இடங்களில் வால்மீகியின் கூற்றுக்களையும் ஆசிரியர் கையாண்டிருக்கிறார். ஓர் உதாரணம்: சூர்ப்பனகையோடு ராமன் உரையாடும்போது, "உன்னை நான் மனைவியாக ஏற்க மாட்டேன். எனக்குச் சீதை என்ற இந்த ஒரு மனைவி போதும். இங்கே என் தம்பி இலக்குவன் மனைவியின்றித் தனியே இருக்கிறான். அதனால் நீ அவனிடம் போ" என்று சொல்வது, வால்மீகி ராமாயணத்தில் காணப்படுவதாகும். கம்பர் இவ்வாறு கூறவில்லை. அருணாசலக் கவிராயர், வால்மீகி கூறியிருப்பதைப் போல் தம் நாடகத்தில் பாடியிருக்கிறார். பொதுவாகக் கம்பராமாயணக் கதையைத் தழுவியே தம்முடைய நாடகக் கதையை நடித்திக் கொண்டு போகும் கவிராயர், நாடகம் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யம் குன்றாமலும் இருப்பதற்காக முக்கியமில்லாதவை என்று தாம் கருதும் கட்டங்களை ஒதுக்கியிருக்கிறார்;
காவியத்தில் விஸ்தாரமாகச் சொல்லப்படும் சம்பவங்களையும் ஒரு வரி, அரைவரியில் குறிப்பிட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்குப் போய்விடுகிறார். 500 பக்கங்கள் கொண்ட இந்தப் பெரிய நூலைப் படிக்கும் போது மேன்மேலும் சுவாரஸ்யம் மிகுந்து கொண்டு போகிறதே ஒழிய, சலிப்புத் தட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சுவாரஸ்யம் என்பது இந்த நாடக நூலின் இணையற்ற தனிச் சிறப்பாகும். பிற்காலத்தில் இவர் நூலை முன்மாதிரியாக வைத்து இயற்றப்பட்ட "மகா பாரத நாடகம்" "நந்தன் சரித்திரம்," "திருவிளையாடல் கீர்த்தனம்" போன்ற நூல்கள் அனைத்துமே சுவாரஸ்யம், விறுவிறுப்பு, வேகம் என்ற அம்சங்களிலும், இன்னும் பல முக்கிய அம்சங்களிலும், இவர் நூலின் பக்கத்தில் கூட வரமுடியாதவாறு எவ்வளவோ தூரம் பின் தங்கி நிற்கின்றன. ராம நாடகத்தின் இந்த ஒப்பற்ற சிறப்புக்கு அவர் கதையைக் கையாண்ட முறை ஒன்று மட்டும் காரணமல்ல. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. அவருடைய சுவைமிக்க தமிழ் நடை, துடிப்பான சொல்லாட்சி, அபாரமான வர்ணனைத்திறன், அற்புதமான நகைச்சுவை போன்றவையும் சேர்ந்து நாடகத்தின் பெருமையை விண்ணுக்கு உயர்த்தி விட்டன.
தமிழ் நடை
ராம நாடகப் பாட்டுக்களில் கையாளப்பட்டிருக்கும் தமிழ் நடை, புலவர்கள் கையாளும் தமிழ் நடையல்ல; பொதுமக்களின் பேச்சு நடையே ஆகும். சில உதாரணங்களைப் பார்ப்போம்:
"உலகம் எல்லாத்தையும்
நீ ஆள வேணும்; பின்
ஒருவர் ஆண்டு, குறை
வாங்குமோ?
மலைதாங்கும் பாரத்தை
மலையே தாங்கவேணும்;
மண்ணாங் கட்டிஎன்ன
தாங்குமோ?"
இது ராமனைத் தேடிக் காட்டுக்கு வந்து, அண்ணனை அயோத்திக்குத் திருப்புமாறு கேட்டுக் கொள்ளும் பரதனின் கூற்று.
கூனியை பார்த்துக் கைகேயி பின்வருமாறு கூறுகிறாள்:
"பரதன் பட்டம்கட்டாவிட்டால்
நட்டியோ?
அவன் சர்க்கலைக் கட்டியோ?
என்பிள்ளை ராமன்
எட்டியோ?
நான்தான் என்ன
மட்டியோ?
வெட்டிப் போடுவேன் உன்னை."
இதைக் கேட்டுக் கூனி சொல்கிறாள்:
"ராமன்முடி சூடும்என்ற
பேய்மதி உனக்குவந்த(து)
ஏதம்மா?-என்ன-வாதம்மா?
சீமாட்டிஉன் பிள்ளைபரதன்
காமாட்டி ஆனானேஎன்ன
செய்கையே?-அம்மா-கைகையே?"
தேடல் தொடர்பான தகவல்கள்:
ராம நாடகம் - நாடகக் கலைக் கட்டுரைகள், ", நாடகம், நாடகக், சுவாரஸ்யம், தமிழ், கலைக், நாடகத்தின், கட்டுரைகள், இவர், நூலின், அம்சங்களிலும், என்ன, கேட்டுக், பின், உன்னை, arts, drama, கலைகள், ராமன், கவிராயர், வால்மீகி, கொண்டு