தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
நாட்டுப்புற நாடகம் (கி.பி. 1700-1900):
பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுகள் தமிழ் நாடக வரலாற்றைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க காலக்கட்டங்கள். பதினேழாம் நூற்றாண்டிலிருந்துதான் நமக்கு நாடக இலக்கியங்கள் எழுத்து வடிவில் கிடைத்துள்ளன. இக்காலத்தில் நாடகக்கலை சங்ககாலத்தில் நடைபெற்ற பொதுவியல் கூத்துகள் போல் மக்கள் கலையாக மலர்ச்சிப் பெற்றது. இக்காலத்தில் தோன்றியவையே பள்ளு, குறவஞ்சி, நொண்டி, கீர்த்தனை, தெருக்கூத்து நாடகங்கள். இன்று வரை நமக்கு 53 பள்ளு நாடகங்களைப் பற்றியும், 69 குறவஞ்சி நாடகங்களைப் பற்றியும், 15 நொண்டி நாடகங்களைப் பற்றியும், 33 கீர்த்தனை நாடகங்கள் பற்றியும் மட்டுமே விவரங்கள் கிடைத்துள்ளன.
பள்ளு நாடகங்கள் உழவுத் தொழிலையே நம்பிக் காடுமேடுகளிலும் கழனி கரைகளிலும் வாழ்ந்து வந்த பள்ளர்களின் வாழ்க்கையைக் கலைநயத்தோடு காட்டுவதாய் அமைந்திருந்தன. குறவன் குறத்தியரின் வாழ்க்கையை மேடையில் காட்டும் நாட்டுப்புற நாடகம் குறவஞ்சி ஆகும். திருடச் சென்று நொண்டியானவனின் வாழ்க்கைச் சிக்கல்களைக் காட்டும் நாடகம் நொண்டி நாடகமாகும். கதை சொல்லும் போக்கில் அமைந்து, இடையிடையே நாடகப் போக்கில் உரையாடல்கள் விரவி அமைந்த இசைப் பாடல் விளக்கங்களான புராண பாடனங்கள் நாளடைவில் கீர்த்தனை நாடகங்களாய் உருப்பெற்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் செல்வாக்குடன் இருந்த நாடகக் கலை வடிவம் தெருக்கூத்து ஆகும். பாடல்களோடு பாடல்களின் விளக்கமாக உரையாடல் பகுதிகள் சேர்க்கப்பட்டமை தெருக்கூத்தில் காணப்பட்ட புதுமையாகும். இந்நாடகங்களை ஆடியவர்கள் ஊர் ஊராகச் சென்று, விழாக்காலங்களில் இரவு நேரங்களில் தெருக்களிலோ நாற்சந்திகளிலோ களத்துமேடுகளிலோ அவ்வப்போது அமைத்துக் கொண்ட மேடைகளில் அல்லது மேடை போன்ற அமைப்பில் தெருக்கூத்து ஆடிவந்தனர். நாட்டுப்புறக் கதைகள், புராணக் கதைகள், காப்பியக்கதைகள் போன்றவை தெருக்கூத்து நாடகத்தளமாயின. மற்றைய நாட்டுப்புற நாடகங்களைப் போலன்றி தெருக்கூத்துகள் மிக நீண்டனவாக இருந்தன. சில நாடகங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியாக நடிக்கப்பட்டுப் பல மாதங்கள் வரை நடிக்கப்பட்டன. தெருக்கூத்து நாடக நடிகர்கள் கூத்தாடிகள் எனப்பட்டனர். இவர்கள் தனிஇனமாக வாழ்ந்து பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வந்தனர். கூத்து நடிகர்கள் அனைவரும் ஒன்றாக உச்சத்தொனியில் பாடவும் ஆடவும் தெரிந்தவர்களாக இருந்தனர். பெண் வேடத்தையும் ஆண்களே தாங்கி கூத்தாடினர். உடையணிகளும் ஒப்பனைக் கோலங்களும் தெருக்கூத்தில் தனிச்சிறப்பானவை. ஒரு வேடதாரிக்கு ஒப்பனை செய்யவே இரண்டு மூன்று மணிநேரம் ஆகும். தெருக்கூத்து நாடகங்களில் பின்பாட்டு என்பது குறிப்பிடத்தக்க இயல்பு ஆகும். ஒவ்வொரு வேடதாரியும் ஒரு பாட்டினை ஒவ்வொரு அடியாகப் பாடுவான். ஒரு அடி பாடி முடிந்ததும் அந்த பாடலடியை சுற்றிலுமுள்ள வேடதாரிகள் அனைவரும் பாடுவர்.
இரவு முழுவதும் ஆடப்பெற்ற தெருக்கூத்தின் செல்வாக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குறையத் தொடங்கியது.வெளியுலக முன்னேற்றம் தெருக்கூத்து நாடகங்களின் வீழ்ச்சியை விரைவுபடுத்தியது. சிறந்த காட்சி பின்னணிகளும் திரைகளும் கொண்ட நாடக மேடைகளில் பாரசீக நாடகக் குழுவினர் நாடகங்கள் நடத்தலாயினர். நன்றாகக் கட்டப்பட்ட, நல்ல இருக்கை வசதி கொண்ட நாடகவரங்குகளில் இவை நடிக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் ஆங்கிலம் கற்ற சிலர் மேலைநாட்டுப் பாணியில் புதிய நாடகங்கள் இயற்றத் தொடங்கினர். நகரங்களில் புதிய நாடகப் பயின்முறைக் குழுக்கள் தோன்றிப் புதிய முறைகளில் நாடகங்களை நடிக்கத் தலைப்பட்டனர்.
புராண காப்பியக் கதைகளையே சுற்றி வந்த தமிழ்நாடகம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சமுதாயச் சிக்கல்களையும் நாடகப் பொருளாக்கியது. அங்கத நாடகங்கள் பல தோன்றின. உரைநடையில் நாடகங்கள் பல இயற்றப்பட்டன. ஆங்கில நாடக மேதையான சேக்ஸ்பியரின் நாடகங்களைப் போன்ற கவிதை நாடகங்களைத் தோற்றுவிக்கும் முயற்சியும் உருவாகியது. இக்காலத்தில் நாடக கலை வளர்ச்சிக்காக பரிமாத் கலைஞர் பெரும்பாடுபட்டார். சங்கரதாஸ் ஸ்வாமிகள், சம்பந்த முதலியார் போன்றோர் இந்நூற்றாண்டில் தம் பணியைத் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் வீறுடன் பணியாற்றி நாடகாசிரியர்களுக்கு இலக்கிய உலகில் சிறந்த இடத்தைப் பெற்றுத் தந்தனர். நடித்தற்குரிய நாடகங்கள் மட்டுமின்றிப் படிப்பதற்குரிய நாடகங்கள் என்று ஒரு இலக்கிய வகை தோன்றி வளர்ந்தது. மற்றைய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டும் தழுவலாகவும் பல நாடகங்கள் இயற்றப்பட்டன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாடக வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகங்கள், நாடக, தெருக்கூத்து, நாடகங்களைப், நாடகக், நாடகம், பற்றியும், தமிழ், ஆகும், பத்தொன்பதாம், ஒவ்வொரு, கொண்ட, கீர்த்தனை, நாடகப், நொண்டி, குறவஞ்சி, நாட்டுப்புற, கலைக், நூற்றாண்டின், வரலாறு, இக்காலத்தில், கட்டுரைகள், பள்ளு, மற்றைய, மேடைகளில், இலக்கிய, கதைகள், நடிகர்கள், பிற்பகுதியில், அனைவரும், சிறந்த, இரவு, நடிக்கப்பட்டன, இயற்றப்பட்டன, வாழ்ந்து, குறிப்பிடத்தக்க, நமக்கு, கலைகள், arts, drama, கிடைத்துள்ளன, வந்த, புராண, நூற்றாண்டில், போக்கில், சென்று, காட்டும், தெருக்கூத்தில்