தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள்
இடையே சர்க்கார் விதித்த 'தமாஷாவரி' நாடக சபைகளுக்கு மிகுந்த பாதகம் விளைவித்தது. இதற்காக நாங்கள் தனியே விடுத்த வேண்டுகோளெல்லாம் பயனற்றுப் போய்விடவே, ஸ்தாபனரீதியாக எங்கள் குறைகளை அறிவிக்கவும், வளர்ச்சிக்கு வழிகாணவும், 1950-ல் நாடகக்கழகம் என்ற ஸ்தாபனத்தைச் சென்னையில் நிறுவினோம். தொழில்முறை நடிகர்கள், பயில் முறை நடிகர்கள் எல்லோரும் இதில் பங்கு கொண்டார்கள்.
நாடகத் தியேட்டர்கள் இல்லாத குறையைப் போக்கத் 'திறந்தவெளி அரங்குகள்' ஏற்படுத்தி நாடகக் கழகத்தின் சார்பில் கூட்டாகப் பெருங் கலைவிழாக்களை நடத்தி ஜனங்களுக்கு நாடகக்கலையில் இருக்கும் ஆர்வத்தைச் சர்க்காருக்கு எடுத்துக்காட்டினோம்.
கடைசியாக, 1951-ல் சென்னை சர்க்கார் நாடகத்திற்குத் தமாஷாவரியிலிருந்து விலக்களித்தார்கள். அதன் பிறகு நாடெங்கும் திறந்தவெளி அரங்குகள் தற்காலிகமாகக் கட்டி பெரிய அளவில் நாடகங்களை நடிக்கத் தொடங்கினார்கள். தியேட்டரில் 2000 பேர்களுக்குமேல் பார்க்க முடியாதிருந்த நிலைமை மாறி 5000, 10000-க்கணக்கான மக்கள் பார்க்கும் முறையில் திறந்த வெளியில் நாடகங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் நடைபெறும் சுதேசிப் பொருட்காட்சிகளில் எல்லாம் பெரிய கலையரங்குகள் ஏற்படுத்தி நாடகங்களுக்கு முதலிடம் கொடுத்து நகர சபைகளும் நாடக வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன.
நடிகர்களிடையே போட்டியைத் தவிர்த்துக் கலை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கவும், நாடகமேடைக்குப் பாதகமில்லாமல் சினிமாவுக்கு நடிகர்களைப் பயன்படுத்தவும் நடிகர்களுக்குள்ள குறைகளைப் போக்கவும் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற ஒரு ஸ்தாபனத்தை அமைத்து மூன்று ஆண்டுகளாகச் செயலாற்றி வருகிறோம். இந்தச் சங்கத்தின் வெளியீடாக 'நடிகன் குரல்' என்ற மாதப் பத்திரிகை ஒன்றும் நடைபெற்று வருகிறது.
இதுவரை தமிழ் நாடகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வளர்ந்து வந்த பெருமையையும், இடைக்கால நிலையையும், பின்னால் ஏற்பட்ட வளர்ச்சியையும், இன்றுள்ள நிலையையும் ஓரளவு உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.
தமிழ் நாடக உலகின் புதிய சகாப்தம் என்று நான் குறிப்பிட்ட சென்ற 75 ஆண்டுகளாக மேடைகளில் நடிக்கப்பட்டுவந்த நாடகங்கள் பெரும்பாலும் நூல்வடிவில் இருக்கின்றன.
1891-ல் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி என்னும் பேரறிஞர் எழுதிய 'நாடக வியல்' என்ற ஓர் அருமையான நாடக இலக்கண நூலும், அதே ஆண்டில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய 'மனோன்மயம்' என்ற ஒரு மிகச் சிறந்த நாடக இலக்கிய நூலும் தமிழ் நாடகத்தின் கருவூலங்களாக இருந்து வருவதை இங்குக் குறிப்பிட வேண்டியது எனது கடமையாகும்.
இதனுடன் தமிழ் நாடக வரலாற்றை நிறுத்திக் கொண்டு, இனி எங்கள் தமிழ் நாடகக் கலைஞர்களின் சார்பில் பாரத நாட்டின் பொதுவான நாடக வளர்ச்சியைக் கருதி மத்திய சங்கீத நாடகக் கழகத்தின் சார்பில் மத்திய சர்க்காருக்குச் சில யோசனைகள் கூறவிரும்புகிறேன்.
நாம் சுதந்தரம் பெற்றபின் நமது கலைஞர்கள் சீனா, ருஷ’யா, அமெரிக்கா முதலிய வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று பாரதத்தின் புகழைப் பரப்பி வருகிறார்கள். வெளிநாட்டுக் கலைஞர்கள் நம் பாரத நாட்டுக்கும் வந்து போகிறார்கள். பரஸ்பர நல்லுறவுக்காக இந்தக் கலைத் தூது சர்க்கார் ஆதரவில் நடந்து வருகிறது. இதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஆனால், அதே சமயத்தில் நமது உள்நாட்டில் ஒவ்வோர் இராச்சியத்திலுமுள்ள பல மொழிக் கலைஞர்களிடையே இவ்விதம் நல்லுறவு ஏற்படுத்தும் முயற்சிகள் இன்னும் தொடங்கப்படவில்லையே என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு மொழிப் பிரதேசமும் மற்றொரு மொழிப் பிரதேசத்திற்கு சர்க்கார் ஆதரவில் கலைக்குழுவினரை அனுப்பி ஏன் நல்லுறவை வளர்க்கக்கூடாது? வங்காளிக் கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்க் கலைஞர்கள் வங்காளத்திற்கும், மகாராஷ்டிரக் கலைஞர்கள் கேரளாவுக்கும், கேரளக் கலைஞர்கள் குஜராத்திற்கும் சென்று கலை விழாக்கள் நடத்தி உறவு கொண்டாடும் வசதியும் வாய்ப்பும் ஏற்பட்டால் அரசியல் பிளவுகளைக்கூட இந்தக் கலைஞர்கள் கூட்டுறவு ஒன்றுபடுத்த உதவுமே. உள்நாட்டில் கலைத்தூதுகோஷ்டிகளை அனுப்பி ராஜ்யத்துக்கு ராஜ்யம் கலை உறவு ஏற்படுத்தும் நல்ல முயற்சியை இனியேனும் மத்திய சர்க்கார் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது எங்கள் ஆசை. உடனடியாகச் செய்யவேண்டிய அவசர வேலையாக இதனை மேற்கொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, தமிழ், கலைஞர்கள், நாடகக், சர்க்கார், எங்கள், மத்திய, சார்பில், நாட்டில், கலைக், வளர்ச்சி, கட்டுரைகள், சென்று, நூலும், பாரத, நமது, இந்தக், ஆதரவில், உறவு, வேண்டும், அனுப்பி, மொழிப், உள்நாட்டில், ஏற்படுத்தும், எழுதிய, வருகிறது, நடிகர்கள், திறந்தவெளி, வளர்ச்சிக்கு, drama, கலைகள், நாடகம், அரங்குகள், ஏற்படுத்தி, நாடகங்கள், arts, பெரிய, நடத்தி, கழகத்தின், நிலையையும்