தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள்
அடுத்தபடியாக, கலை சம்பந்தமாக நடைபெறும் நன்முயற்சிகள் யாவும் இனி அந்தப் பிரதேச சங்கீத நாடகச் சங்கங்களின் ஆதரவில் நடைபெற வேண்டுமென்றும், பிரதேசச் சங்கங்களின் செயல்களை மேற்பார்வையிடும் ஒரு மத்திய சங்கமாகத்தான் அகில இந்திய சங்கீத நாடகச் சங்கம் இருக்க வேண்டுமென்றும் நாங்கள் கருதுகிறோம். உபகாரச் சம்பளம், உதவி நிதி, பரிசுகள் வழங்கல் இவையெல்லாம் பாரதத்தின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குப் போவதில் பல கஷ்டங்கள் விளைகின்றன. தகுதியுள்ளவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்காமல் போகவும் தகுதியற்றவர்கள் சிபார்சுகளின் மூலம் உதவிகள் பெறவும் வசதிகள் இருக்கின்றன.
கலைவளர்ச்சிக்கென மத்திய சர்க்கார் ஒதுக்கும் பணத்தை வீதாசாரப்படி பிரதேசங்களுக்கே பிரித்துக் கொடுத்துவிட்டால், அந்தப் பிரதேச சர்க்கார் இதை நிர்வகிப்பது எளிதாக இருக்கும். பிரதேச சர்க்கார் நிர்வாகத்தில் தவறுகள் ஏற்பட்டால் அதற்காக அவர்களை அணுகித் தவறுகளைத் திருத்திக் கொள்ளச் செய்வதும் எங்களுக்குச் சுலபமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதுபோன்ற நாடகக் கருத்து அரங்குகள் கூட்டுவதிலும் ஒரு யோசனை. ஒரு பிரதேசத்திலேயேகூட நாடகக்கலையை எப்படி வளர்க்க வேண்டுமென்பதில் பலவிதக் கருத்து வேற்றுமைகள் கலைஞர்களிடையே இருந்து வருகின்றன.
ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழிப் பிரதேசத்திலும் அந்தந்தப் பிரதேச அகாடமியின் ஆதரவில் நாடகக் கருத்து அரங்குகள் கூட்டி அந்தந்தப் பிரதேசத்தின் முக்கியக் கலைஞர்களின் கருத்துக்களை அறிய வேண்டும். அவர்களில் ஒருவரை முறைப்படி தேர்வு செய்து இறுதியாக மத்திய சங்கம் நடத்தும் கருத்து அரங்கில் கலந்து கொள்ளச் செய்தால் அந்தப் பிரதேசத்தின் பொதுக் கருத்தை அவர் வெளியிடுவது சுலபமாக இருக்கும். தேசீய நாடக விழாக்களையும் அந்தந்தப் பிரதேசச் சங்கங்களே நடத்த வேண்டும். தனிப்பட்ட ஸ்தாபனங்களின் சார்பில் தேசீய நாடக விழாக்கள் நடைபெறுவது சரியான முறையாகாது.
மற்றொன்று; பாரதத்தின் தலைநகரான டில்லியில் 75 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு 'தேசீய நாடக அரங்கம்' கட்டப்படவிருப்பதாகப் பத்திரிகைகளில் ஒரு செய்தி படித்தேன். நமது இன்றைய நிலையில் ஒரே நகரில் 75 லட்சம் ரூபாய்களைச் செலவிட்டுத் தியேட்டர் அமைப்பதைவிட ஒவ்வோர் இராஜ்யத்தின் தலைநகரிலும் ஐந்து லட்சம் ரூபாய்கள் செலவில் ஒவ்வொரு தேசீய நாடக அரங்கம் அமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? நமது இன்றைய அவசரத் தேவை தியேட்டர். இதைப் பூர்த்தி செய்ய ஐந்து லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் நாடக அரங்கமே போதுமானது என்று கருதுகிறோம். முடிந்தபோது அதையே மேலும் அதிக வசதிகள் உள்ளதாக விரிவு படுத்திக் கொள்வது கஷ்டமன்று.
இறுதியாக ஒன்று சொல்லி என் கருத்தை நிறுத்திக் கொள்கிறேன். கலையும் மொழியும் ஒன்றோடொன்று பிணைந்து கிடப்பவை. நாடகக் கலையை மொழியிலிருந்து பிரிக்க முடியாது. கலைத்துறையில் ஒவ்வொரு மொழியினருக்கும் ஒரு தனித் தன்மையும் வரலாற்றுச் சிறப்பும் இருப்பது இயற்கை. எனவே, கலைஞர்களாகிய எங்களுக்கு ஆழ்ந்த தாய் மொழிப் பற்று உண்டு. இந்த மொழிப் பற்றை மொழிவெறியாக யாரும் எண்ணவேண்டியதில்லை. இதே சமயத்தில் பாரதத்தின் தேசீய ஒற்றுமையையும் நாங்கள் உயிராகப் போற்றுகிறோம்.
இந்த எங்கள் நல்லுணர்ச்சியில் நம்பிக்கை வைத்து எல்லாவகையிலும் எங்கள் வளர்ச்சிக்கு உதவி புரியுங்கள். உங்கள் உதவியால் உற்சாகம் பெறும் நாங்கள் எங்கள் கலாசக்தியால் முழுமூச்சுடன் பாரதத்தின் ஒற்றுமையையும் பண்பாட்டையும் வளர்ப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தமிழ் நாட்டில் நாடக வளர்ச்சி - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகக், தேசீய, இருக்கும், பிரதேச, பாரதத்தின், கருத்து, செலவில், மொழிப், மத்திய, கலைக், வளர்ச்சி, நாங்கள், எங்கள், நாட்டில், அந்தந்தப், ஒவ்வொரு, அந்தப், கட்டுரைகள், லட்சம், தமிழ், சர்க்கார், வேண்டும், இறுதியாக, பிரதேசத்தின், அரங்கம், ஐந்து, ஒற்றுமையையும், தியேட்டர், இன்றைய, ரூபாய், நமது, கருத்தை, உதவிகள், நாடகச், சங்கங்களின், ஆதரவில், சங்கீத, கலைகள், drama, arts, வேண்டுமென்றும், பிரதேசச், கொள்ளச், சுலபமாக, வசதிகள், உதவி, சங்கம், கருதுகிறோம், அரங்குகள்